வணிகம்
2022-ம் ஆண்டுப் பொருளாதாரம் இரட்டிப்பாகி 5 டிரில்லியன் டாலராக இருக்கும், சொல்கிறார் பிரதமர் மோடி!
இந்தியாவின் சர்வதேச மாநாடு மற்றும் எக்ஸ்போ மையத்தினைத் துவக்கி வைத்த பிரதமர் மோடி 2022-ம் ஆண்டுக்குள் இந்தியாவின் பொருளாதாரம் இரட்டிப்பாகி 5 டிரில்லியன் டாலர்களாக இருக்கும் என்றும் அதில் உற்பத்தி மற்றும் விவசாயத் துறையின் பங்களிப்பு 1 டிரில்லியன் டாலராக இருக்கும் என்றும் கூறினார்.
அன்மையில் அறிவிக்கப்பட்ட தேனா வங்கி, விஜயா வங்கி மற்றும் பாங்க் ஆப் பரோடா வங்கிகள் இணைவு குறித்துப் பேசிய பிரதமர் நாட்டின் நலத்திற்காக வெட்கப்படாமல் எந்த ஒரு கடினமான முடிவையும் மத்திய அரசு எடுக்கத் தயங்காது என்றும் குறிப்பிட்டார்.
ஐடி மற்றும் ரீடெயில் துறையில் அதிக வேலை வாய்ப்புகளை உருவாக்குவதன் மூலம் இந்தியாவின் பொருளாதாரம் 8 சதவீதம் வரை உயரும் என்றும் மேக்ரோ எக்னாமிக் அடிப்படைகள் வலிமையாக உள்ளதாகவும் அவர் கூறினார்.
மேக் இன் இந்தியா திட்டத்தின் கீழ் 80 சதவீத மொபைல் போன்கள் இந்தியாவிலேயே உற்பத்தி செய்யப்பட்டு விற்பனை செய்யப்பட்டு வருவதாகவும் இதனால் 3 லட்சம் கோடி ரூபாய் அந்நிய செலாவணி மிச்சம் ஆவதாகவும் மோடி தெரிவித்தார்.
வங்கி இணைவுகள் மட்டும் இல்லாமல் சரக்கு மற்றும் சேவை வரி என்ற ஜிஎஸ்டி போன்றவற்றைத் தைரியமாக மத்திய அரசு அறிமுகம் செய்ததாகவும் இதனால் 17 மத்திய மற்றும் மாநில வரிகள் நீக்கப்பட்டுள்ளதாகவும் மோடி கூறினார்.