தமிழ்நாடு
மாணவர்களுக்குப் பாடங்களில் சந்தேகமா? இலவச உதவி எண் அறிவிப்பு!
![School students - Bhoomitoday](https://www.bhoomitoday.com/wp-content/uploads/2020/09/School-students-1.jpg)
பள்ளி மாணவர்களுக்கு தங்களுடைய பாடங்கள் குறித்த சந்தேகங்கள் இருந்தால், உதவி எண்ணைத் தொடர்புகொண்டு கேட்கலாம் என்று அமைச்சர் செங்கோட்டையன் தெரிவித்துள்ளார்.
தமிழகத்தில் கோவிட்-19 தொற்று காரணமாகக் கடந்த 5 மாதங்களாகப் பள்ளிகள் திறக்கப்படவில்லை. இனிமேலும் பள்ளிகள் திறந்தாலும் 100 சதவீத பாடங்களை முடிக்க முடியாது என்பதால் பாடத்திட்டங்கள் இந்த ஆண்டு மட்டும் குறைக்கப் பள்ளிக் கல்வித்துறை முடிவு செய்துள்ளது.
இது குறித்து அமைச்சர் செங்கோட்டையன் கூறுகையில், “பாடத்திட்டங்கள் குறைப்பது குறித்த அறிக்கை முதல்வரிடம் சமர்ப்பிக்கப்பட்டு உள்ளது. எனவே பாடங்களைக் குறைப்பது குறித்து முதல்வர் எடப்பாடி பழனிசாமி ஆய்வு செய்து அறிவிப்பார்.
பள்ளி மாணவர்கள் சேர்க்கை இந்த மாத இறுதி வரை நடக்கும். அதேபோல, மாணவர்கள் தங்களுடைய பாடங்கள் குறித்த சந்தேகங்களை 14474 என்ற இலவச உதவி எண்ணில் தொடர்பு கொண்டு கேட்கலாம்.
இந்த உதவி எண் மூலம், காலை 8 மணி முதல் மாலை 5 மணி வரை மாணவர்கள் தங்களுடைய சந்தேகங்களைக் கேட்டுத் தெரிந்து கொள்ளலாம். அடுத்த மாதம் முதல் இந்த எண் பயன்பாட்டுக்கு வரும்.
மேலும், பள்ளிகள் திறந்தாலும் கண்டிப்பக பள்ளிக்கு வர வேண்டும் என்ற கட்டாயம் இருக்காது. விருப்பம் உள்ள மாணவர்கள் மட்டும் பள்ளிக்கு வரலாம்” என அமைச்சர் செங்கோட்டையன் தெரிவித்துள்ளார்.