வணிகம்
அமேசான், ரிலையன்ஸ் எதிராக விஸ்வரூபம் எடுக்க விரும்பும் டாடா!
மும்பையை தலைமையிடமாகக் கொண்டு செயல்பட்டு வரும் டாடா குழுமம், அமேசான், பிளிப்கார்ட், ரிலையன்ஸ் போட்டியாக இ-காமார்ஸ் துறையில் மிகப் பெரிய முதலீட்டைச் செய்ய உள்ளதாகத் தகவல்கள் கூறுகின்றன.
முதற்கட்டமாக டாடா உற்பத்தி செய்யும் பொருட்களுக்கான இ-காமர்ஸ் தளமாக இது இருக்கும் என்று தகவல்கள் அறிந்தவர்கள் கூறுகின்றனர். 2020 இறுதியில் அல்லது 2021-ம் ஆண்டு தொடக்கத்தில் இந்த புதிய இ-காமர்ஸ் தளம் பயன்பாட்டுக்கு வர அதிக வாய்ப்புகள் உள்ளது. இந்த இ-காமர்ஸ் தளத்தை முழுக்க முழுக்க டாடா குழுமம் உள்நாட்டுத் தொழில்நுட்ப உதவியுடனேயே செய்து வருகிறது.
ரிலையன்ஸ் நிறுவனம் தங்களது இ-காமர்ஸ் வணிகத்திற்காக பேஸ்புக், கூகுள் என பல முன்னணி நிறுவனங்களிடம் இருந்து 20 பில்லியன் டாலர் தொகையை முதலீடாகப் பெற்று இருந்தது. தற்போது டாடா நிறுவனமும் இ-காமர்ஸ் துறையில் தங்களது ஆதிக்கத்தைச் செலுத்த விரும்புகிறது.
இது கண்டிப்பாக அமேசான், பிளிப்கார்ட், ரிலையன்ஸ்க்கு ஒரு சவாலாக அமையும் என்றும் கூறப்படுகிறது. டாடா குழும தலைவர் ரத்தன் டாடாவுக்கு ஸ்மாப்டீல் இ-காமர்ஸ் நிறுவனத்தில் குறிப்பிட்ட அளவிலான பங்குகள் இருந்ததும் குறிப்பிடத்தக்கது.
டாடாவின் இ-காமர்ஸ் தளம் அதன் தயாரிப்புகளான டீ, கார், வாட்ச், ஏசி போன்ற பொருட்களுக்கு முக்கியத்துவம் அளிக்கும் வாய்ப்புகள் அதிகளவில் உள்ளது.