தமிழ்நாடு
நான் பதவி விலகத் தயார்: அமைச்சர் எஸ்.பி.வேலுமணி அதிரடி!
தமிழக உள்ளாட்சித்துறை அமைச்சர் எஸ்.பி.வேலுமணி மீது ஒப்பந்தங்கள் ஒதுக்கியதில் ஊழல் நடைபெற்றதாக திமுக குற்றம் சாட்டியது. இந்த குற்றச்சாட்டு நிரூபிக்கப்பட்டால் தான் பதவி விலக தயார் என அமைச்சர் எஸ்.பி.வேலுமணி தெரிவித்துள்ளார்.
அமைச்சர் எஸ்.பி.வேலுமணி உள்ளாட்சித்துறை ஒப்பந்தங்களை தனக்கு வேண்டப்பட்டவர்களுக்கு வழங்கி ஊழல் செய்ததாக டைம்ஸ் நவ் ஊடகம் செய்தி வெளியிட்டது. இதனையடுத்து திமுக சார்பில் எஸ்.பி.வேலுமணி மீது ஊழல் தடுப்பு மற்றும் கண்காணிப்புத் துறை அலுவலகத்தில் புகார் அளிக்கப்பட்டது.
இதனையடுத்து நேற்று டெல்லியில் அமைச்சர் எஸ்.பி.வேலுமணி செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது, திமுக தமிழக அரசை கவிழ்க்க பல்வேறு முயற்சிகளை செய்துவருகிறது. முதல்வர், துணை முதல்வரைத் தொடர்ந்து தற்போது என்மீது ஊழல் புகார் கொடுத்துள்ளனர்.
அதிமுக அரசைக் கலைக்க வேண்டும், கட்சியை முடக்க வேண்டும் என்ற எண்ணத்தில் தவறான கருத்துக்களை எதிர்க்கட்சிகள் தெரிவித்து வருகின்றன. எனது பதவியைத் தவறாகப் பயன்படுத்தி எந்த ஒப்பந்தத்தையும் வழங்கவில்லை. என் மீதான ஊழல் குற்றச்சாட்டை ஸ்டாலின் நிரூபித்துவிட்டால், நான் பதவி விலகத் தயார். அது மட்டுமின்றி, அரசியலிலிருந்தே விலகிவிடுகிறேன் என்றார் அதிரடியாக.