தமிழ்நாடு
விமானத்தில் என்னை யாராவது விமர்சித்திருந்தால்?: தினகரன் பளிச் பதில்!
ஆராய்ச்சி மாணவி சோபியாவை பாஜக மாநில தலைவர் தமிழிசை கைது செய்ய வைத்து சிறையில் அடைத்த சம்பவம் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது. தமிழிசையின் இந்த செயல் அவரது அரசியல் முதிர்ச்சியின்மையை காட்டுவதாக பரவலாக கருத்துக்கள் வருகிறது.
இந்நிலையில் தமிழிசையின் இந்த செயல்பாடு குறித்தும், தன்னை யாராவது விமானத்தில் இப்படி விமர்சனம் செய்திருந்தால் என்ன செய்திருப்பேன் என்றும் பதில் அளித்துள்ளார் அம்மா மக்கள் முன்னேற்றக் கழகத்தின் துணைப் பொதுச்செயலாளர் டிடிவி தினகரன்.
நேற்று பெங்களூர் சிறையில் சசிகலாவை சந்தித்து தற்போதைய அரசியல் சூழல் குறித்து ஆலோசித்துவிட்டு செய்தியாளர்களை சந்தித்த தினகரன் சோபியா விவகாரம் குறித்து பேசினார். அப்போது, இது தமிழிசையின் சகிப்புத்தன்மையற்ற செயலாகவே உள்ளது.
சோபியா கனடாவில் ஆராய்ச்சி படிப்பு படிப்பவர். குறிப்பாக காவல்துறை துப்பாக்கிச் சூட்டால் பாதிக்கப்பட்ட தூத்துக்குடியைச் சேர்ந்தவர். தூத்துக்குடி மக்களின் உணர்வுகளைத்தான் மாணவி சோபியா எதிரொலித்தார். இதனை தமிழிசை நாகரீகமாக கையாண்டிருக்கலாம். ஆனால் காவல் துறையில் புகார் தெரிவித்து மாணவி சோபியாவை கைது செய்ய வைத்துள்ளார்.
இதுபோன்ற செயல்களில் தமிழிசை ஈடுபட்டிருக்கக் கூடாது. அவரது தந்தை மூத்த காங்கிரஸ் தலைவர், அவரது சித்தப்பா கூட காங்கிரஸ் எம்எல்ஏவாக இருக்கிறார். அரசியலில் என்ன பிரச்னை வரும் என்பது தமிழிசைக்கு சிறுவயதிலிருந்து நன்றாகவே தெரியும். பொது இடத்தில் எப்படி நடந்துகொள்ள வேண்டும் என்றும் அவருக்குத் தெரிந்திருக்க வேண்டும் என்றார் தினகரன்.
தொடர்ந்து பேசிய தினகரன், நான் விமானத்தில் செல்லும்போது என்னை யாராவது இப்படி விமர்சனம் செய்தால், அதனை உரிய முறையில் கையாண்டிருப்பேன். அதைவிடுத்து விமர்சனத்திற்காக புகார் செய்து கைது செய்யும் வரையிலா கொண்டு செல்வார் தமிழிசை என்றார்.