இந்தியா
இன்று வெளியாக உள்ள 3 முக்கிய வழக்குகளின் தீர்ப்புகள்!
இன்று சபரிமலை மற்றும் ரஃபேல் மறுசீராய்வு வழக்கு மற்றும் தேர்தலின் போது காங்கிரஸ் தரப்பால் காவலாளி திருடன் என்று மோடியை எதிர்த்துச் செய்த பிரச்சாரம் மீதான அவதூறு வழக்கு உள்ளிட்ட 3 முக்கிய தீர்ப்புகள் வெளியாக உள்ளன.
சென்ற ஆண்டு சபரிமலையில் 10 முதல் 50 வயதுக்கு உட்பட்ட பெண்களை அனுமதிக்க வேண்டும் என்று உச்ச நீதிமன்றம் தீர்ப்பளித்து இருந்தது. ஆனாலும் அதை முறையாகச் செயல்படுத்த முடியாதவாறு தடுத்த இந்து அமைப்புகளை அதற்கு எதிரான மறுசீராய்வு மனுவைத் தாக்கல் செய்திருந்தனர். இந்நிலையில் நடப்பு ஆண்டில் உச்ச நீதிமன்றத்தின் தீர்ப்பை எப்படியாவது நிறைவேற்றிவிட வேண்டும் என்ற முனைப்பில் கேரள அரசும் உள்ளது. ஆனால் இந்த மறுசீராய்வு வழக்கு முழுமையாக விசாரிக்கப்பட்டு இன்று தீர்ப்பு வழங்கப்பட உள்ளது.
அடுத்ததாக இந்திய விமானப்படைக்கு 36 ரஃபேல் விமானங்கள் வாங்கியதற்கான ஒப்பந்தம் வழங்கியில் பாஜக அரசு ஊழல் செய்துள்ளது என்று தொடரப்பட்ட வழக்குக்கு, அப்படி ஊழல் நடைபெறவில்லை என்று உத்தரவிடப்பட்டு இருந்தது. இந்நிலையில் அந்த தீர்ப்பை எதிர்த்து மறுசீராய்வு மனுத் தாக்கல் செய்யப்பட்டு விசாரணை நடைபெற்று வந்த நிலையில் அந்த வழக்கின் தீர்ப்பு நாளை வெளியாக உள்ளது.
மூன்றாவதாக மக்களவை தேர்தல் 2019 சமயத்தில் இந்த நாட்டின் காவலாளி நான் என்று பிரதமர் மோடி கூறியதை விமர்சித்து, காவலாளி ஒரு திருடன் இன்று காங்கிரஸ் தரப்பால் பிரச்சாரம் செய்யப்பட்டது. இதை எதிர்த்து ராகுல் காந்தி மீது அவதூறு வழக்குப் பதிவு செய்யப்பட்டு விசாரணை செய்யப்பட்டு வந்தது., இந்த வழக்கின் மீதான விசாரணையும் முடிந்து இன்று தீர்ப்பு வெளியாக உள்ளது குறிப்பிடத்தக்கது.