இந்தியா
வாகனத்தில் லிஃப்ட் கொடுப்பது குற்றமா? என்ன சொல்கிறது மோட்டர் வாகன சட்டம்!
மும்பையில் நிதின் என்பவர் காரில் சென்று கொண்டு இருக்கும் போது முகம் தெரியாத நபர் ஒருவருக்கு லிஃப்ட் கொடுத்துள்ளார். அதை அருகிலிருந்த சிக்னலில் பார்த்துக்கொண்டு இருந்த போக்குவரத்து காவலர், காரை நிறுத்த உத்தரவிட்டுள்ளார்.
பின்னர், முகம் தெரியாத நபருக்கு லிஃப்ட் கொடுத்தது தவறு என்று டிரைவிங் லைசன்ஸை வாங்கிக் கொண்டு, நீதிமன்றத்தில் அபராதத்தைச் செலுத்திவிட்டு லைசன்சை பெற்றுக்கொள்ளுமாறு அறிவுறுத்தியுள்ளார்.
நீதிமன்றம் சென்ற போது, “மோட்டார் வாகன சட்டப் பிரிவு 66/192-ன் கீழ் குற்றத்தை ஒப்புக்கொண்டு 2000 ரூபாய் அபராதத்தை மட்டும் 1500 ரூபாயாக குறைத்துக்கேட்டுச் செலுத்தியுள்ளார். இந்த நிகழ்வு நடந்து ஒரு வருடம் ஆகியுள்ளது. உடனே லிஃப்ட் கொடுப்பது குற்றமா? என்று உங்களுக்குக் கேள்வி எழும்.
மோட்டார் வாகன சட்டப் பிரிவு 66/192 என்பது இரண்டு பிரிவுகளைக் கொண்டது. 192 என்பது வாகனம் ஓட்டும் போது நடைபெறும் விதிமீறல்களுக்கான பொதுவானப் பிரிவு. அதன் படி எந்த ஒரு விதிமீறல் என்றாலும் அபராதம் விதிக்கப்படும்.
இந்த வழக்கில் முக்கியமானது மோட்டார் வாகன சட்டப் பிரிவு 66. இந்த சட்டப் பிரிவின் கீழ் தனிநபர் ஒருவர் வெள்ளை நம்பர் பிளேட் கொண்ட வாகனத்தை வாடகைக்காகப் பயன்படுத்தக் கூடாது. மேலே உள்ள வழக்கில் லிஃப்ட் கொடுத்து இருந்தாலும் அந்த பயணியை இறக்கி விடும் முன்பு அதற்கான கட்டணம் ஏதும் வசூல் செய்ய கூடாது அவ்வளவு தான். அதாவது லிஃப்ட் கொடுக்கலாம். வெள்ளை நம்பர் பிளேட் வாகனத்தை வாடகை அல்லது வணிக ரீதியாகப் பயன்படுத்தக்கூடாது என்பது தான் விதி என்று வல்லுநர்கள் கூறுகிறார்கள்.
ஆனால் ரேப்பிடோ உள்ளிட்ட சேவைகளில் வெள்ளை போர்டு நம்பர் பிளேட் கொண்டு வாகனத்தை வாடகைக்கு விடுகிறார்களே என்று கேட்கலாம். இந்த சட்டம் 3, 4-க்கு மேற்பட்ட சக்கர வாகனங்களுக்கு மட்டுமே என்றும் கூறுகின்றனர்.