தமிழ்நாடு
தினகரன் போன்ற காளான்கள் அவ்வப்போது முளைப்பார்கள்: ஜெயகுமார் பாய்ச்சல்!
![Dinakaran 3 - Bhoomitoday](https://www.bhoomitoday.com/wp-content/uploads/2018/09/Dinakaran-3.jpg)
அம்மா மக்கள் முன்னேற்றக் கழகத்தின் துணைப் பொதுச்செயலாளர் டிடிவி தினகரனுக்கும் அதிமுக அமைச்சர்களுக்கும் இடையே கடந்த சில தினங்களாக உச்சக்கட்ட வார்த்தைப்போர் நடந்து வருகிறது. இந்நிலையில் நேற்று தினகரனுக்கு பதிலடி கொடுக்கும் வகையில் பேசிய அமைச்சர் ஜெயகுமார் அவரை கடுமையாக விமர்சித்தார்.
முன்னதாக நேற்று முன்தினம் நடைபெற்ற பொதுக் கூட்டத்தில் பேசிய தினகரன், முதல்வராக வேண்டும் என்று பன்னீர்செல்வம் பகல் கனவு காண்கிறார். அவரது கனவு பலிக்காது என்று குறிப்பிட்டிருந்தார். இதற்கு பதிலடி கொடுக்கும் விதமாக நேற்று செய்தியாளர்களை சந்தித்தார் அமைச்சர் ஜெயகுமார்.
அப்போது, தினகரன் போன்ற காளான்கள் அவ்வப்போது முளைப்பார்கள். கறுப்புப் பணத்தை வெள்ளையாக்க ஆங்காங்கே பொதுக் கூட்டங்கள் நடத்தும் வேலைகளில் அவர் ஈடுபட்டிருக்கிறார். தினகரன் பகல் கனவில் சஞ்சரிக்கிறார். சொப்பனத்தில் காணும் அரிசி சோற்றுக்கு உதவாது என்று கூறுவார்கள். கடலைத் தாண்ட ஆசை இருக்கலாம். ஆனால் கால் இருக்க வேண்டும். முதலில் வாய்க்கால் தாண்டப் பார்க்க வேண்டும். வாய்க்கால் தாண்டவே வக்கில்லாதவர்கள் சீட் பிடிப்பார்கள் என்பது உலக அதிசயம் என்று கடுமையாக விமர்சித்தார் ஜெயகுமார்.