தமிழ்நாடு
எங்க வீட்டுக்காரரும் கச்சேரிக்குப் போனார்: முதல்வரின் வெளிநாட்டு பயணத்தை பங்கமாய் கலாய்த்த தினகரன்!
தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி அரசுமுறை பயணமாக 14 நாட்களுக்கு வெளிநாட்டு பயணம் மேற்கொண்டுள்ளார். இந்த பயணம் தமிழகத்துக்கு வெளிநாட்டு முதலீடுகளை ஈர்ப்பதற்கு தான் என்று கூறப்பட்டுள்ளது. இந்த பயணத்தின் போது முதல்வர் எடப்பாடி பழனிசாமி லண்டன், அமெரிக்கா, துபாய் உள்ளிட்ட நாடுகளுக்கு செல்கிறார்.
இந்த நாடுகளில் உள்ள தொழில் அதிபர்களை சந்திக்க உள்ள முதல்வர் எடப்பாடி பழனிசாமி அவர்களை தமிழகத்தில் தொழில் தொடங்க அழைப்புவிடுக்க உள்ளார். முதல்வரின் இந்த பயணத்தில் அவருடன் அமைச்சர் விஜயபாஸ்கரும் சென்றுள்ளார். இந்நிலையில் முதல்வரின் இந்த வெளிநாட்டு பயணத்தை அமமுக பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் கலாய்த்துள்ளார்.
முதல்வரின் வெளிநாட்டு பயணம் குறித்து பேசிய டிடிவி தினகரன், எங்க வீட்டுக்காரரும் கச்சேரிக்குப் போனார் என்று இல்லாமல் முதலீடுகளை ஈர்த்து வந்தால் சந்தோஷம். தமிழகத்துக்கு முதலீடுகளைப் பெற்று வருவதற்காகச் செல்வதில் எந்த தவறும் இல்லை. முதலீடுகள் வருகிறதா என்று பார்ப்போம். வெயிட் அண்ட் சி என்றார். மேலும், முதல்வர்கள் எல்லாம் வெளிநாடுகள் சென்றால் பொறுப்பை இன்னொருவரிடம் கொடுத்துவிட்டு செல்வார்கள்.
ஆனால் இப்போது டெக்னாலஜி வளர்ந்து விட்டது. அதனால் தானே பார்த்துக் கொள்கிறேன் என்ற நிலை இருக்கிறதென்றால் நம்பிக்கையின்மையும் பயமும் தான் காரணம். அதிமுக ஒரு நெல்லிக்காய் மூட்டை மாதிரி. ஆட்சி, அதிகாரம் கையில் இருப்பதால் ஒன்றாக இருக்கிறது. ஆட்சி முடியட்டும், நெல்லிக்காய்கள் சிதறிவிடும் என்று விமர்சித்தார் தினகரன்.