இந்தியா
6 பேரால் இரண்டு நாள் வைத்து சீரழிக்கப்பட்ட சிறுமிக்கு மொட்டை அடித்த பஞ்சாயத்து!
பீகாரில் சிறுமி ஒருவரை 6 பேர் சேர்ந்து தூக்கிக்கொண்டு போய் வலுக்கட்டாயமாக இரண்டு நாட்கள் வைத்து பாலியல் பலாத்காரம் செய்த சம்பவம் நடைபெற்றுள்ளது. ஆனால் ஊர் பஞ்சாயத்து பாதிக்கப்பட்ட சிறுமிக்கே தண்டனை வழங்கியது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
பிகாரில் கயா மாவட்டத்தில் சாலை அருகே நின்று கொண்டிருந்த சிறுமியை 6 பேர் கொண்ட கும்பல் ஒன்று வலுக்கட்டாயமாக தூக்கிக்கொண்டு போய் ஊர் பஞ்சாயத்து கட்டிடத்தின் மேல்பகுதியில் வைத்து இரண்டு நாட்கள் பாலியல் பலாத்காரம் செய்துள்ளனர். இதனையடுத்து அந்த சிறுமியை அங்கேயே விட்டுச் சென்றுள்ளனர்.
இதனை கண்டு பெண் ஒருவர் கொடுத்த தகவலின் பேரில் சிறுமி மீட்கப்பட்டார். பின்னர் கூட்டப்பட்ட பஞ்சாயத்தில் பாதிக்கப்பட்ட சிறுமிக்கு மொட்டை அடித்து ஊரை சுற்றி வரவேண்டும் என தீர்ப்பளிக்கப்பட்டது. காரணம் சிறுமியை சீரழித்தவர்கள் பஞ்சாயத்தாரின் உறவினர்கள் என்பதால்.
இந்த அநியாயமான தீர்ப்பை எதிர்த்து சிறுமியின் பெற்றோர் போலீசில் புகார் அளித்தனர். இதனையடுத்து காவல்துறை பஞ்சாயத்தில் தீர்ப்பளித்த 5 பேரையும், பாலியல் பலாத்காரத்தில் ஈடுபட்ட ஒருவரையும் கைதுசெய்தனர். தலைமறைவாக உள்ள மற்ற 5 பேரையும் போலீசார் தீவிரமாக தேடி வருகின்றனர்.