தமிழ்நாடு
முதல்வர் எடப்பாடி பழனிசாமியின் வெளிநாட்டு பயணத்தில் ஸ்டாலின் எழுப்பும் சந்தேகம்!
தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி வெளிநாடு முதலீடுகளை ஈர்க்க இங்கிலாந்து, அமெரிக்கா போன்ற நாடுகளுக்கு இன்று பயணம் மேற்கொள்ள உள்ளார். 14 நாட்கள் முதல்வர் மேற்கொள்ள உள்ள இந்த வெளிநாட்டு பயணம் குறித்து திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் சந்தேகம் ஒன்றை எழுப்பியுள்ளார்.
சேலத்தில் திமுக சார்பில் நடைபெற்ற கலைஞர் சிலை திறப்பு விழாவில் கலந்துகொண்ட திமுக தலைவர் மு.க.ஸ்டாலின், முதல்வர் எடப்பாடி பழனிசாமியின் வெளிநாட்டு பயணம் குறித்து பேசினார். அப்போது, ஜெயலலிதா முதல்வராக இருந்தபோது 2015-இல் முதல் உலக முதலீட்டாளர்கள் மாநாடு நடத்தப்பட்டது. அதில் 2.42 லட்சம் கோடி முதலீடு வந்ததாக ஒரு கணக்கைக் கொடுத்தார்கள். என்ன முதலீடுகள் வந்துள்ளது, எந்த இடத்திலிருந்து வந்துள்ளது, எவ்வளவு தொழிற்சாலைகள் உருவாக்கப்பட்டுள்ளன, எத்தனை பேருக்கு வேலைவாய்ப்பு வந்துள்ளது என்பது குறித்து வெள்ளை அறிக்கை வெளியிடுங்கள் என்று சட்டமன்றத்தில் திரும்பத் திரும்ப வலியுறுத்தினோம், பதில் இல்லை.
எடப்பாடி பழனிசாமி இரண்டாவது முதலீட்டாளர்கள் மாநாடு நடத்தினார். அதில் ரூ.5 லட்சம் கோடிக்கு முதலீட்டு ஒப்பந்தம் போடப்பட்டுள்ளது என்று அறிவித்தனர். அவை குறித்தும் கேள்வி எழுப்பினோம். அதையும் கூறவில்லை. இந்த லட்சணத்தில்தான் முதல்வர் இப்போது வெளிநாடு செல்கிறார். தமிழக மக்களின் முன்னேற்றத்துக்கு முதலீடுகளை ஈர்ப்பதற்காக அல்லது முதல்வரின் முதலீட்டை அதிகப்படுத்த வெளிநாடு செல்கிறாரா என்ற சந்தேகம் எழுகிறது என்றார் ஸ்டாலின்.