தமிழ்நாடு
தலைமை ஆசிரியரை ஆபாசமாக திட்டிய ஆசிரியர்: குடிபோதையில் அட்டகாசம்!
மாணவர்களுக்கு முன்மாதிரியாக இருக்க வேண்டிய ஆசிரியர்கள் சில நேரங்களில் அதிலிருந்து தவறுவது உண்டு. அதுபோல நாமக்கல்லில் ஒரு ஆசிரியர் குடிபோதையில் பள்ளிக்கு வந்து மயங்கி விழுந்த சம்பவம் நடந்துள்ளது.
நாமக்கல் மாவட்டம் ராசிபுரம் அண்ணா சாலையில் அரசு மேல்நிலைப்பள்ளி ஒன்று உள்ளது. பழமைவாய்ந்த இந்த பள்ளியில் சுற்றுவட்டாரத்தை சேர்ந்த 700-க்கும் மேற்பட்ட மாணவ, மாணவிகள் படித்து வருகின்றனர். இந்த பள்ளியில் ஓவிய ஆசிரியராக முத்துக்குமார் என்பவர் பணியாற்றி வருகிறார். இவர் நேற்று காலை குடிபோதையில் தள்ளாடியபடியே பள்ளிக்கு வந்து கையெழுத்து போட சென்றார். ஆனால் போதை அதிகமாகி அவர் அங்கேயே மயங்கி விழுந்தார்.
இதனையடுத்து சக ஆசிரியர்கள் அவரது போதையை தெளிய வைக்க முயற்சித்தனர். இதுகுறித்து பள்ளியின் தலைமை ஆசிரியர் முத்துக்குமாரிடம் விசாரித்தபோது அவர் தலைமை ஆசிரியரை ஆபாச வார்த்தைகளால் திட்டியுள்ளார். இதனையடுத்து தன்னை ஆபாச வார்த்தைகளால் திட்டியதாக தலைமை ஆசிரியர் ராசிபுரம் காவல் நிலையத்தில் ஆசிரியர் முத்துக்குமார் மீது புகார் அளித்தார்.
இதனையடுத்து முத்துக்குமார் மீது ஆபச வார்த்தைகளால் திட்டியதாக வழக்கு பதிவு செய்த போலீசார் அவரை எச்சரித்து அனுப்பி வைத்தனர். இந்நிலையில் பணி நேரத்தில் குடிபோதையில் ஆசிரியர் பள்ளிக்கு வந்து அட்டகாசம் செய்ததால் அவர் மீது துறை ரீதியான நடவடிக்கைக்கு பரிந்துரை செய்யப்பட்டுள்ளது.