தமிழ்நாடு
அமெரிக்க முதலாளிகள் கேட்கும் கேள்விக்கு முதல்வரால் பதிலளிக்க முடியுமா? கே.எஸ்.அழகிரி கிண்டல்!
தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி அந்நிய முதலீட்டை ஈர்ப்பதற்காக அமெரிக்கா, லண்டன் என வெளிநாடுகளுக்கு பயணம் மேற்கொள்ள உள்ளார். இந்நிலையில் ஏற்கனவே நடந்த உலக முதலீட்டாளர்கள் மாநாடு குறித்து கேள்வி எழுப்பியுள்ளார் தமிழக காங்கிரஸ் தலைவர் கே.எஸ்.அழகிரி.
மதுரையில் இன்று செய்தியாளர்களை சந்தித்த தமிழக காங்கிரஸ் தலைவர் கே.எஸ்.அழகிரி, அந்நிய முதலீட்டை பெறுவதற்காக முதல்வர் வெளிநாடு செல்வது மகிழ்ச்சியளிக்கிறது. ஆனால் அதற்கு முன்பாக ஒரு கேள்வி, இதற்கு முன்னர் சென்னையில் இரண்டு முதலீட்டாளர்கள் மாநாடுகளை நடத்தினீர்களே அதனால் பெற்றுள்ள மூலதனம் எவ்வளவு, தொடங்கப்பட்ட தொழிற்சாலைகள் எத்தனை, வேலை நடைபெற்றுக் கொண்டிருக்கும் தொழிற்சாலைகள் அதில் எத்தனை என்பது குறித்து வெள்ளை அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும் என்றார்.
மேலும், முதல்வர் மேல் நான் பழி சுமத்தவில்லை. இதில் எந்த உள்நோக்கமும் இல்லை. கடந்த மாநாடுகளின் போது கிடைக்கபெற்ற மூலதனம், லாபம் ஆகியவை குறித்து தெரிவிக்கவேண்டும். உள் நாட்டிலேயே சாதிக்க முடியாதவர்கள் அமெரிக்கா சென்று என்ன செய்யப் போகிறார்கள். அமெரிக்க முதலாளிகள் கேட்கும் கேள்விக்கு முதல்வரால் பதிலளிக்க முடியுமா? விளம்பரம் தேடுவதில் தவறில்லை, அதில் ஏதேனும் பலன் இருக்க வேண்டும் என்றார் கே.எஸ்.அழகிரி.