தமிழ்நாடு
வேளாங்கண்ணி மாதா கோயில், சபரிமலை: தீவிரவாத தாக்குதலுக்கு திட்டமிட்டிருந்த இடங்கள் இவைதான்!
லஷ்கர்-இ-தொய்பா இயக்கத்தை சேர்ந்த 6 தீவிரவாதிகள் தமிழகத்தின் கோவையில் ஊடுருவி இருப்பதாக உளவுத்துறை எச்சரிக்கை விடுத்துள்ளதை அடுத்து கோவை உள்ளிட்ட தமிழகம் முழுவதும் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது. இந்நிலையில் தீவிரவாத தாக்குதல் நடத்த திட்டமிடப்பட்டிருந்த இடங்கள் குறித்த தகவல் வெளியாகி உள்ளது.
லஷ்கர்-இ-தொய்பாவின் 6 பேர் கொண்ட தீவிரவாத குழு இலங்கை வழியாக தமிழகத்திற்குள் ஊடுருவியுள்ளதாகவும், அவர்கள் கோவையில் தங்கியுள்ளதாகவும் உளவுத்துறைக்கு தகவல் கிடைத்ததையடுத்து கோவைக்கு உயர் எச்சரிக்கை விடப்பட்டது. அந்த 6 தீவிரவாதிகளில் ஒருவர் பாகிஸ்தனை சேர்ந்த இலியாஸ் அன்வர் என்றும் மற்ற 5 பேரும் இலங்கை தமிழர், இஸ்லாமியர்கள் என்றும் தகவல் வெளியானது.
இந்த தீவிரவாதிகள் தாக்குதல் நடத்தாமல் இருக்க தமிழகம் முழுவதும் பலத்து போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. வாகன தணிக்கை, இருசக்கர, நான்கு சக்கர வாகனங்கள் பேட்ரோல், மக்கள் கூடும் இடங்களில் காவல் துறையினர் சீருடையிலும், மப்டியிலும் கண்காணிப்பு போன்ற பணிகளில் இரண்டாயிரத்திற்கும் மேற்பட்ட காவலர்கள் ஈடுபட்டுள்ளனர்.
மோப்ப நாய் பிரிவு, வெடி குண்டு மீட்பு பிரிவு, காவல் விரைவு தகவல் பிரிவு உள்ளிட்ட அனைத்து உளவுத்துறை பிரிவுகளும் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளது. இந்த தீவிரவாதிகள் தற்போது கோவையில் முகாமிட்டுள்ளதாகவும், தாங்கள் இஸ்ல்லாமியர் என்ற அடையாளத்தை காட்டிக்கொள்ள கூடாது என்பதற்காக நெற்றியில் திருநீறு, திலகம் இட்டு இருப்பார்கள் என உளவுத்துறை அனுப்பிய அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.
மேலும் இந்த தீவிரவாதிகள், வேளாங்கண்ணியில் உள்ள மாதா கோயில், ஊட்டியில் உள்ள வெலிங்கடன்,சூலூர் விமானப்படை தளம், பத்தனம்திட்டாவில் உள்ள சபரிமலை உள்ளிட்ட பல முக்கிய வழிபாட்டு இடங்களை குறிவைத்து தாக்குதல் நடத்த திட்ட மிட்டிருப்பதாக உளவுத்துறை எச்சரித்துள்ளது. இதனையடுத்து கோவை, மதுரை மீனாட்சியம்மன் கோயில், வேளாங்கண்ணி மாதா கோயில், தமிழக, கர்நாடகா எல்லை, தமிழக, கேரளா எல்லைகளில் துப்பாக்கி ஏந்திய போலீசார் பாதுகாப்பில் ஈடுபட்டுள்ளனர்.