தமிழ்நாடு
தமிழகத்தில் ஊடுருவிய 6 தீவிரவாதிகள்: உளவுத்துறை எச்சரிக்கையால் பதற்றம்!
லஷ்கர்-இ-தொய்பா இயக்கத்தை சேர்ந்த 6 தீவிரவாதிகள் தமிழகத்தின் கோவையில் ஊடுருவி இருப்பதாக உளவுத்துறை எச்சரிக்கை விடுத்துள்ளதை அடுத்து கோவை உள்ளிட்ட தமிழகம் முழுவதும் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது.
லஷ்கர்-இ-தொய்பாவின் 6 பேர் கொண்ட தீவிரவாத குழு இலங்கை வழியாக தமிழகத்திற்குள் ஊடுருவியுள்ளதாகவும், அவர்கள் கோவையில் தங்கியுள்ளதாகவும் உளவுத்துறைக்கு தகவல் கிடைத்ததையடுத்து கோவைக்கு நள்ளிரவு முதல் உயர் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. அந்த 6 தீவிரவாதிகளில் ஒருவர் பாகிஸ்தனை சேர்ந்த இலியாஸ் அன்வர் என்றும் மற்ற 5 பேரும் இலங்கை தமிழர், இஸ்லாமியர்கள் என்றும் தகவல் வெளியாகி உள்ளது.
இந்த தீவிரவாதிகள் கோவையில் தாக்குதல் நடத்தாமல் இருக்க நேற்று நள்ளிரவு முதல் தமிழகம் முழுவதும் பலத்து போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. வாகன தணிக்கை, இருசக்கர, நான்கு சக்கர வாகனங்கள் பேட்ரோல், மக்கள் கூடும் இடங்களில் காவல் துறையினர் சீருடையிலும், மப்டியிலும் கண்காணிப்பு போன்ற பணிகளில் இரண்டாயிரத்திற்கும் மேற்பட்ட காவலர்கள் ஈடுபட்டுள்ளனர்.
மோப்ப நாய் பிரிவு, வெடி குண்டு மீட்பு பிரிவு, காவல் விரைவு தகவல் பிரிவு உள்ளிட்ட அனைத்து உளவுத்துறை பிரிவுகளும் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளது. விநாயகர் சதுர்த்தி, வேளாங்கண்ணி மாத கோவில் திருவிழா போன்றவற்றில் அசம்பாவிதத்தை ஏற்படுத்துவது இந்த தீவிரவாதிகளின் நோக்கமாக இருக்கலாம் என்றும் சந்தேகிக்கப்படுகிறது. மக்கள் அதிகமாக கூடும் இடங்களில் தாக்குதல் நடக்கமால் என அஞ்சப்படுகிறது.
அதே நேரத்தில் போதிய பாதுகாப்பு போடப்பட்டுள்ளதால் மக்கள் யாரும் அச்சப்பட தேவையில்லை எனவும் சந்தேகிக்கும் வகையில் யாராவது சுற்றினால் உடனடியாக காவல்துறைக்கு தகவல் தெரிவிக்குமாறும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.