தமிழ்நாடு
எம்எல்ஏக்களுக்கு சம்பள உயர்வு, அவர்களை கவனித்தால் ஆட்சியை தக்கவைக்கலாம் என நினைக்கிறார்கள்: விளாசும் தினகரன்!
மக்களவை மற்றும் சட்டமன்ற இடைத்தேர்தல் தோல்விக்கு பின்னர் பெரும் பின்னடைவை சந்தித்திருக்கும் அமமுகவை பலப்படுத்த பல்வேறு மாவட்டங்களுக்கு சென்று நிர்வாகிகள் கூட்டத்தை கூட்டி கட்சியை பலப்படுத்தும் முயற்சியில் தீவிரமாக இறங்கியுள்ளார் டிடிவி தினகரன்.
இந்நிலையில் தஞ்சை மாவட்ட அமமுக நிர்வாகிகளின் ஆலோசனைக் கூட்டம் தஞ்சாவூரில் நேற்று நடைபெற்றது. இந்த கூட்டத்தில் கலந்துகொண்டு பேசிய தினகரன் ஹைட்ரோ கார்பன் திட்டத்தால் உள்ள பாதிப்புகள் குறித்து பேசினார். தொடர்ந்து திமுக, அதிமுக என இரண்டு கட்சிகளையும் விமர்சித்தார்.
அப்போது, ஜெயலலிதா நிறைவேற்றித் தருவதாக சொன்ன கோரிக்கைகளை நிறைவேற்றக் கோரி போக்குவரத்து ஊழியர்களும், ஆசிரியர்களும் போராட்டம் நடத்துகிறார்கள். ஆனால் எம்எல்ஏக்களுக்கு சம்பள உயர்வு அளிக்கப்படுகிறது. சட்டமன்ற உறுப்பினர்களை சரியாக வைத்துக்கொண்டால் ஆட்சியை தக்கவைக்கலாம் என்று நினைக்கிறார்கள்.
அதிமுக எம்எல்ஏக்களை மட்டுமல்ல திமுக உறுப்பினர்களையும் சேர்த்தே கவனிக்கிறார்கள். ஆட்சியைக் கலைப்போம் என்று ஸ்டாலின் கூறுகிறார். ஆனால் ஆட்சியைக் கலைக்க திமுக உறுப்பினர்களே விரும்ப மாட்டார்கள் என்பது அவருக்கே தெரியும். எம்எல்ஏக்கள் தயவால்தான் இந்த ஆட்சி நடைபெற்றுக்கொண்டிருக்கிறது என்றார் தினகரன்.