தமிழ்நாடு
ரவீந்திரநாத் முத்தலாக்கை ஆதரித்தது ஏன்? மத்திய அமைச்சர் ஆவாரா? அதிரடி விளக்கம்!
அதிமுக சார்பில் மக்களவையில் உள்ள ஒரே எம்பி துணை முதல்வர் ஓபிஎஸ்சின் மகன் ரவீந்திரநாத் குமார் மட்டுமே. இவருக்கு மத்திய அமைச்சர் பதவி வழங்கப்படலாம் என கூறப்பட்ட நிலையில் அது தொடர்பான எந்த அறிவிப்பும் இல்லாமல், எந்த முன்னேற்றமும் இல்லாமல் இருக்கிறது.
இந்த சூழ்நிலையில் சில தினங்களுக்கு முன்னர் மக்களவையில் முத்தலாக் தடைச்சட்டம் கொண்டுவரப்பட்டபோது அதனை ஆதரித்துப்பேசிய ரவீந்திரநாத் அதற்கு ஆதரவாகவும் வாக்களித்தார். இது தமிழகத்திலும், அதிமுகவிலும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது. இதுவரை முத்தலாக்கை எதிர்த்துவந்த அதிமுக தற்போது ஆதரித்தது ஏன் என கேள்வி எழும்பியது. அதுவும் வேலூர் தேர்தல் நேரத்தில் ரவீந்திரநாத் முத்தலாக்கை ஆதரித்தது அதிமுகவுக்கு பின்னடைவை ஏற்படுத்தியது.
இதனால் உஷாரான அமைச்சர்கள் மாநிலங்களவையில் அதிமுக முத்தலாக்கை எதிர்க்கும் என கூறினர். இதனையடுத்து மாநிலங்களவையில் அதிமுக எம்பிக்கள் முத்தலாக்கை எதிர்த்தனர். ஆனால் எதிர்த்து வாக்களிக்காமல் வாக்கெடுப்பை புறக்கணித்து வெளிநடப்பு செய்தனர். இந்த சூழ்நிலையில் தற்போது தனது நிலைப்பாட்டுக்கு காரணம் என்ன என்ற விளக்கத்தை அளித்துள்ளார் ரவீந்திரநாத் குமார்.
முத்தலாக் விவகாரம் தொடர்பாக நேற்று செய்தியாளர் சந்திப்பில் விளக்கம் அளித்த ரவீந்திரநாத், தனிப்பட்ட முறையிலேயே முத்தலாக் தடை சட்டத்தை ஆதரித்தேன் என்றார். மேலும் மத்திய அமைச்சர் தொடர்பான கேள்விக்கு, மத்திய அமைச்சர் பதவி குறித்து நான் யோசித்ததே இல்லை. தலைமையே இறுதி முடிவெடுக்கும் என்றார்.