தமிழ்நாடு
ஜெயலலிதா விட்டுச்சென்ற வாக்கு சதவீதம் சிந்தாமல் சிதறாமல் அப்படியே உள்ளது: ஈபிஎஸ், ஓபிஎஸ் அறிக்கை!
நடந்து முடிந்த வேலூர் மக்களவை தேர்தலில் திமுக வேட்பாளர் கதிர் ஆனந்த் தன்னை எதிர்த்து போட்டியிட்ட அதிமுக வேட்பாளர் ஏ.சி.சண்முகத்தை விட 8141 வாக்குகள் அதிகம் பெற்று வெற்றிபெற்றுள்ளார். இந்நிலையில் இந்த தேர்தல் தோல்வி தங்களை பொறுத்தவரை வெற்றிதான் என அதிமுக தரப்பு கூறியுள்ளது.
இது தொடர்பாக அதிமுக ஒருங்கிணைப்பாளர்கள் ஓ.பன்னீர்செல்வம் மற்றும் எடப்பாடி பழனிசாமி ஆகியோர் கூட்டாக வெளியிட்டுள்ள அறிக்கையில், வேலூர் மக்களவை தேர்தல் முடிவு, அதிமுகவின் செல்வாக்கை உணர்த்தும் வகையில் அமைந்துள்ளது. இரட்டை இலை சின்னத்தில் போட்டியிட்ட ஏ.சி.சண்முகம் 477199 வாக்குகளைப் பெற்றிருக்கிறார். மிக மிகக் குறைந்த வாக்கு வித்தியாசத்தில் வெற்றி வாய்ப்பை இழந்திருக்கிறார் என்றாலும் இது கழகத்தைப் பொறுத்தவரை வெற்றி என்ற இலக்கணத்திற்குள் அடங்கும் தேர்தல் முடிவு என்பதை யாரும் மறுக்க முடியாது.
அதிமுகவின் தலைமையில் தேர்தல் களம் புகும் அணிதான் தமிழக மக்களின் நம்பிக்கைக்குரிய வெற்றிக்கனியை பறிக்கும் என்பதைத்தான் வேலூர் தொகுதியில் கழகம் பெற்றிருக்கும் வாக்குகள் உணர்த்துகின்றன. புரட்சித்தலைவி அம்மா அளித்துச் சென்ற வாக்குகளின் சதவீதம் சிந்தாமல் சிதறாமல் நம்மிடம் அப்படியே உள்ளது என்பதைத் தான் வேலூர் தொகுதியில் இரட்டை இலை பெற்றிருக்கும் வாக்குகள் பறை சாற்றுகின்றன.
நமது வெற்றியை நாளை சரித்திரம் சொல்லும், இப்படை தோற்கின் எப்படை வெல்லும், வாழ்க புரட்சித் தலைவர் எம்ஜிஆர் நாமம், ஓங்குக புரட்சித்தலைவர் தந்த வெற்றிச் சின்னமாம் இரட்டை இலை சின்னம் என கூறியுள்ளனர்.