தமிழ்நாடு
மாணவர்கள் தற்கொலையை விரும்பி செய்கின்றனர்: ஒரு அமைச்சர் பேசும் பேச்சா இது!
மாணவர்கள் மருத்துவப்படிப்பில் சேர நீட் நுழைவுத்தேர்வை எழுத வேண்டும் என நாடு முழுவதும் அமலில் உள்ளது. ஆனால் மாநிலவழிக்கல்வியில் பயின்ற தமிழக மாணவர்கள் இதனால் பெரிதும் பாதிக்கப்பட்டு அவர்களது மருத்துவக்கனவு பாழாய் போவதால் தமிழகத்தில் இதற்கு இன்று வரை எதிர்ப்பு நிலவுகிறது. ஆண்டு தோறும் நீட் தேர்வு முடிவுகள் வெளியாகும் போது மாணவிகள் உயிரிழப்பு நடந்துகொண்டுதான் இருக்கிறது.
மருத்துவர் ஆக முடியாத சோகத்தில் மன உளைச்சலுக்கு ஆளாகும் மாணவர்கள் தங்கள் உயிரை தங்களே மாய்த்துக்கொள்கின்றனர். இது தமிழகம் முழுவதும் பெரும் சோகத்தை ஏற்படுத்துகிறது. ஆனால் இந்த தற்கொலைகளை மாணவர்கள் விரும்பி ஆர்வத்துடன் செய்வது போல அமைச்சர் ராஜேந்திர பாலாஜி வேலூர் மக்களவை தேர்தல் பிரச்சாரத்தில் பேசியுள்ளார்.
இது தொடர்பாக அமைச்சர் பேசியதாவது, நீட் தேர்வுக்கு தமிழக மாணவர்கள் தங்களது தகுதியைத் தயார்படுத்தி வருகின்றனர். ஒரு சில மாணவர்கள் தற்கொலை செய்கிறார்கள். அவர்களைத் திமுக போன்ற கட்சிகள் ஊக்குவிக்கின்றன. மத்திய அரசு நீட் தேர்வை கொண்டுவந்துள்ளது. தமிழக அரசு தொடர்ந்து எதிர்ப்பு தெரிவித்து வருகிறது. இருந்தபோதிலும், தற்போதைய சூழ்நிலையில் நீட் தேர்வை எதிர்கொள்ள வேண்டி உள்ளது.
மாணவர்களை நாம் தயார் செய்ய வேண்டுமே தவிர, அவர்களின் தற்கொலையை ஊக்குவிக்க கூடாது. சாவில் திமுக போன்ற கட்சிகள் அரசியல் செய்யக்கூடாது. தற்கொலை செய்பவர்களைத் தியாகிகள் ஆக்கி விடுகின்றனர். தற்கொலை செய்வது கோழைத்தனம் என்று எதிர்க்கட்சிகள் அறிவுரை கூற விரும்பவில்லை. தற்கொலைக்கு திமுக கொடுக்கும் அங்கீகாரத்தால் ஏராளமான மாணவர்கள் தற்கொலையை விரும்பி செய்கின்றனர் என்றார்.