இந்தியா
சோமாட்டோ பிரச்சனை: சிறைக்கு செல்ல நேரிடும் என அமித் சுக்லாவுக்கு போலீஸ் எச்சரிக்கை!
சோமாட்டோவில் இந்து அல்லாத நபர் உணவு எடுத்து வருவதாக பிரச்சனை செய்து ஆர்டரை கேன்சல் செய்துவிட்டு சமூக வலைதளத்தில் அதனை வெறுப்பு பிரச்சாரமாக கொண்டு சென்ற அமித் சுக்லாவுக்கு போலீஸ் எச்சரிக்கை விடுத்துள்ளது.
மத்திய பிரதேசத்தின் ஜபல்பூர் பகுதியை சேர்ந்த அமித் சுக்லா என்ற நபர் சில தினங்களுக்கு முன்னர் சோமாட்டோ செயலி மூலம் உணவு ஆர்டர் செய்துள்ளார். அவரது உணவு தயாரிக்கப்பட்டு, டெலிவரிக்காக ஃபயஸ் என்ற நபரிடம் கொடுக்கப்பட்டுள்ளது. அந்த நபர் ஒரு இந்து இல்லை என கூறி தனது ஆர்டரை வேறு டெலிவரி பாய் மூலம் அனுப்ப கோரியுள்ளார் அந்த வாடிக்கையாளர்.
ஆனால் அவ்வாறு டெலிவரி செய்பவரை மாற்ற முடியாது என சோமாட்டோ நிறுவனம் பதில் கூறியது. இந்நிலையில் அந்த வாடிக்கையாளர் தனது ஆர்டரை கேன்சல் செய்துவிட்டு ஆர்டருக்கான தொகை 237 ரூபாயையும் செலுத்தியுள்ளார். பின்னர் இதுகுறித்து அவர் தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.
அவரின் இந்த டுவிட்டர் பதிவுக்கு பலரும் எதிர்ப்பு தெரிவித்தும், கிண்டல் செய்தும் வந்தனர். இந்நிலையில் அந்த நபரின் டுவிட்டர் பதிவிற்கு சோமாட்டோ நிறுவனம் பதிலளித்துள்ளது. அந்த பதிலில், உணவிற்கு மதம் கிடையாது, உணவு என்பதே ஒரு தனி மதம் தான் என கூறியுள்ளது. இது தற்போது இணையத்தில் வைரலாக பரவியது. இந்நிலையில் காங்கிரஸ் மூத்த தலைவரும், முன்னாள் நிதியமைச்சருமான ப.சிதம்பரம் தனது ட்விட்டர் பக்கத்தில், இதுவரை நான் சோமாட்டோவில் உணவு ஆர்டர் செய்தது இல்லை. ஆனால் இனிமேல் ஆர்டர் செய்வேன் என நினைக்கிறேன் என்று பதிவிட்டுள்ளார்.
இதனையடுத்து மத ரீதியாகப் பதிவிட்டு சர்ச்சையை ஏற்படுத்தியது தொடர்பாக அமித் சுக்லாவைக் காவல் துறை எச்சரித்திருக்கிறது. அடுத்த ஆறு மாதங்களில் அரசியல் சாசனத்துக்கு முரணாக மேலும் ஒருமுறை இதுபோல ட்விட்டரிலோ அல்லது வேறு எதிலோ கருத்து தெரிவித்தால் அமித் சுக்லா கட்டாயம் சிறை செல்ல நேரிடும் என்றும் அமித் சுக்லா தொடர் கண்காணிப்பில் உள்ளதாகவும், தீண்டாமைக் கொடுமைகள் மற்றும் மத நல்லிணக்கத்துக்கு ஊறுவிளைவிக்கும் எந்தச் செயல்களுக்கும் அனுமதியில்லை என்றும் ஜபல்பூர் மாவட்ட கண்காணிப்பாளர் அமித் சிங் தெரிவித்துள்ளார்.