இந்தியா
விடுதலை சிறுத்தைகள் கட்சியினர் பயங்கரவாத தேச துரோகிகள்: எச்.ராஜா விமர்சனம்!
என்ஐஏ எனப்படும் தேசியப் புலனாய்வு முகமை அமைப்புக்குக் கூடுதல் அதிகாரங்களை வழங்கும் சட்டத் திருத்த மசோதாவை மக்களவையில் கடந்த 15-ஆம் தேதி உள்துறை அமைச்சர் அமித் ஷா தாக்கல் செய்தார். காரசாரமான விவாதங்களுக்கு பின்னர் இந்த மசோதா 278 எம்பிக்களின் ஆதரவுடன் நிறைவேற்றப்பட்டது.
இந்த என்ஐஏ சட்டத் திருத்த மசோதா ஓட்டெடுப்புக்கு வந்தபோது மசோதாவுக்கு ஆதரவாக திமுக வாக்களித்தது தமிழகத்தில் திமுகவுக்கு எதிராக கடும் விமர்சனங்கள் எழுந்தது. திமுக சிறுபான்மையினருக்கு எதிரான என்ஐஏவை ஆதரித்து வாக்களித்துவிட்டது என்ற குற்றச்சாட்டு பரவலாக எழுந்தது தமிழகத்தில்.
ஆனால் இந்த என்ஐஏ பலப்படுத்தும் சட்டத்தை கம்யூனிஸ்ட் மற்றும் விடுதலை சிறுத்தைகள் கட்சிகள் கடுமையாக எதிர்த்தன. இந்த சட்டத்தை அரசியல் பழிவாங்களுக்காகவும், போராளிகளை ஒடுக்கவும் தவறாக பயன்படுத்தலாம் எதிர்கட்சிகள் எதிர்ப்பு தெரிவித்தன. இந்நிலையில் இதற்கு எதிர்ப்பு தெரிவித்த விடுதலை சிறுத்தைகள் கட்சியை பாஜக தேசிய செயலாளர் எச்.ராஜா கடுமையாக விமர்சித்துள்ளார்.
மதுரையில் நடந்த பசு பாதுகாப்பு மாநாட்டில் கலந்துகொண்டு விட்டு செய்தியாளர்களை சந்தித்த எச்.ராஜா, முத்தலாக் சொல்லி இஸ்லாமிய பெண்களின் வாழ்வுரிமையே பறிப்பதை மோடி தலைமையிலான அரசு தடுத்திருக்கிறது. முத்தலாக் தடுப்பு சட்டத்தை எதிர்க்கும் கட்சிகள் அனைத்தும், பெண் அடிமை தனத்தை போற்றுகின்ற கட்சிகள் என்றார். மேலும், என்ஐஏவை பலப்படுத்தும் சட்டத்தை எதிர்க்கும் கம்யூனிஸ்ட் மற்றும் விடுதலை சிறுத்தைகள் கட்சியினர் பயங்கரவாத தேச துரோகிகள் என கடுமையாக விமர்சித்தார்.