தமிழ்நாடு
கர்நாடகத்தில் ஆட்சி கவிழ திமுகதான் காரணம்: ஸ்டாலினின் ராசி அப்படி!
அண்டை மாநிலமான கர்நாடகாவில் இதற்கு முன்னர் காங்கிரஸ், மதசார்பற்ற ஜனதா கட்சி கூட்டணி ஆட்சி நடைபெற்றது. ஆனால் இந்த ஆட்சி எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ததால் நெருக்கடிக்கு தள்ளப்பட்டு நம்பிக்கை வாக்கெடுப்பில் தோல்வியை தழுவியது. இதனால் காங்கிரஸ், மஜக கூட்டணி ஆட்சி கவிழ்ந்தது.
இதனையடுத்து தற்போது எடியூரப்பா தலைமையில் பாஜக ஆட்சி அங்கு நடைபெற்று வருகிறது. இந்நிலையில் காங்கிரஸ் கூட்டணி ஆட்சி கர்நாடகத்தில் கவிழ்ந்ததுக்கு ஸ்டாலினின் ராசி தான் காரணம் என தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி விமர்சித்துள்ளார்.
வேலூர் தொகுதி மக்களவை தேர்தலில் அதிமுக, திமுக கட்சிகள் பரபரப்பாக இயங்கிக்கொண்டு இருக்கின்றன. திமுக சார்பில் கதிர் ஆனந்தும், அதிமுக சார்பில் ஏ.சி.சண்முகமும் திரும்பவும் போட்டியிடுகின்றனர். இந்நிலையில் ஏ.சி.சண்முகத்துக்கு ஆதரவாக முதல்வர் எடப்பாடி பழனிசாமி இரண்டாவது நாளான நேற்று கே.வி.குப்பம் பகுதியில் பிரச்சாரம் மேற்கொண்டார்.
அப்போது பொதுக்கூட்ட மேடையில் பேசிய அவர், திமுகவையும், மு.க.ஸ்டாலினையும் கடுமையாக தாக்கிப்பேசினார். மேலும் திமுகவுடன் கூட்டணி வைத்ததால்தான் கர்நாடகத்தில் காங்கிரஸ் கூட்டணி அரசு ஆட்சியை இழந்தது. ஸ்டாலினின் ராசி அப்படி என்றும் விமர்சித்தார்.