கிரிக்கெட்
பரபரப்பான இங்கிலாந்து-இந்தியா டெஸ்ட் போட்டி: காத்திருக்கும் சவால்!
இந்தியா இங்கிலாந்து அணிகள் மோதும் நான்காவது டெஸ்ட் போட்டி தற்போது பரபரப்பான கட்டத்தை எட்டியுள்ளது. இன்றைய மூன்றாம் நாள் ஆட்டத்தை இந்தியா எப்படி கையாள இருக்கிறதோ என்பதை பொறுத்து தான் இந்தியாவின் வெற்றி வாய்ப்பு உறுதி செய்யப்படும்.
முதல் இன்னிங்ஸில் இங்கிலாந்து அணி 246 ரன்கள் எடுத்து அனைத்து விக்கெட்டையும் இழந்தது. இதனையடுத்து களமிறங்கிய இந்திய அணி முதல் நாள் ஆட்ட நேர முடிவில் விக்கெட் இழப்பின்றி 19 ரன் எடுத்திருந்தது. நேற்றைய இரண்டாம் நாள் ஆட்டத்தில் இந்தியாவின் விக்கெட்டை சீரான இடைவெளியில் வீழ்த்தினர் இங்கிலாந்து பந்துவீச்சாளர்கள். இந்தியா தரப்பில் புஜாரா மற்றும் கேப்டன் கோலி மட்டுமே அணியை தூக்கி நிறுத்த போராடினர்.
கோலி, புஜாராவுடன் சேர்ந்து சிறப்பாக ஆடினார். ஆனால் 46 ரன்னில் கோலி வெளியேற அதன் பின்னர் வந்தவர்கள் வரிசையாக நடையை கட்டினர். ஆனால் புஜாரா மட்டுமே பாகுபலியை போல இந்திய அணியை காப்பாற்றினார். பின்வரிசை ஆட்டக்காரர்களுடன் கூட கைகோர்த்து அணியை சரிவில் இருந்து மீட்க கடுமையாக போராடினார்.
புஜாராவுடன் கூட்டணி அமைத்த இசாந்த் சர்மா 27 பந்துகளை சந்தித்து 14 ரன் எடுத்தார். அதன் பின்னர் கடைசி விக்கெட்டாக வந்த பும்ரா கூட 24 பந்துகளை சந்தித்து 6 ரன் எடுத்தார். ஆனால் கடைசி வரை ஆட்டம் இழக்காமல் புஜாரா 132 ரன்கள் எடுத்து அணியை சரிவில் இருந்து மீட்டார். இதனையடுத்து அனைத்து விக்கெட்டுகளையும் இழந்த இந்திய அணி 273 ரன்னுக்கு ஆல் அவுட் ஆனது. இங்கிலாந்து தரப்பில் மொயீன் அலி 5 விக்கெட்டுகளை வீழ்த்தினார்.
இதனையடுத்து இரண்டாவது இன்னிங்ஸை 27 ரன்கள் பின்தங்கிய நிலையில் தொடங்கிய இங்கிலாந்து அணி நேற்றைய ஆட்ட நேர முடிவில் விக்கெட் இழப்பின்றி 6 ரன்கள் எடுத்திருந்தது. மூன்றாவது நாளான இன்று சவால் நிறைந்ததாக இருக்கும். இங்கிலாந்து அணியை 200 ரன்னுக்குள் கட்டுப்படுத்த இந்தியா முயற்சிக்கும். ஆனால் இந்த மைதானத்தில் கடைசி இன்னிங்ஸில் 150 ரன்னுக்கு மேல் கூட சேஸ் செய்ய கடினமாகும்.