இந்தியா
காஷ்மீர் விவகாரத்தில் மூக்கை நுழைத்த டிரம்ப்: பதில் கூற மறுக்கும் அமெரிக்கா!
இந்தியா, பாகிஸ்தான் இடையே நீண்ட காலமாக காஷ்மீர் பிரச்சனை நீடித்து வருகிறது. இந்த பிரச்சனையை தீர்த்து வைக்குமாறு அமெரிக்க அதிபர் டிரம்பிடம் இந்திய பிரதமர் மோடி வேண்டுகோள் வைத்ததாக டிரம்ப் கூறியிருந்தார். ஆனால் இதற்கு இந்தியா மறுப்பு தெரிவித்துள்ள நிலையில் இது தொடர்பாக அமெரிக்கா கருத்து தெரிவிக்கவே மறுத்துள்ளது.
பாகிஸ்தான் பிரதமர் இம்ரான்கான் அமெரிக்கா சென்றபோது அவரை வெள்ளை மாளிகையில் வரவேற்றுப்பேசிய அமெரிக்க அதிபர் டிரம்ப், இந்தியாவுக்கும் பாகிஸ்தானுக்கும் இடையே காஷ்மீர் பிரச்சனை நீண்ட காலமாக உள்ளது. இந்தியா எங்களது நெருங்கிய நட்பு நாடு. இரண்டு வாரங்களுக்கு முன்னர் ஜி20 மாநாட்டில் நானும் இந்திய பிரதமர் மோடியும் காஷ்மீர் பிரச்சனை தொடர்பாக பேசிக்கொண்டிருந்தோம்.
அப்போது, மோடி என்னிடம், நீங்கள் இந்த பிரச்சினையை மீடியேட்டராக இருந்து தீர்க்க விரும்புகிறீர்களா? நடுவராக இருந்து தீர்க்க விரும்புகிறீர்களா? என்று கேட்டார். நான் இரு நாடுகளுக்கும் இடையிலான மீடியேட்டராகவே இருந்து இந்தப் பிரச்சினையைத் தீர்க்க விரும்புகிறேன் என்று பேசியினார் டிரம்ப். டிரம்பின் இந்த பேச்சு இந்தியா, பாகிஸ்தான் இரு நாட்டிலும் பெரும் விவாதத்தை உருவாக்கியுள்ளது.
இதனையடுத்து மக்களவையில் இதனை எதிர்க்கட்சிகள் பெரும் விவகாரமாக மாற்றியது. இந்தியாவின் அனுகுமுறை மாறிவிட்டது என குற்றம் சாட்டிய எதிர்க்கட்சிகள் பிரதமர் மோடி இது தொடர்பாக பதில் அளிக்க வேண்டும் என வலியுறுத்தினர். இதனையடுத்து வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கர் அளித்த விளக்கத்தில், பிரதமர் மோடி சார்பில் அமெரிக்க அதிபர் டிரம்ப்பிடம் காஷ்மீர் பிரச்சினை தொடர்பாக எந்த வேண்டுகோளும் வைக்கப்படவில்லை. காஷ்மீர் பிரச்சினை இரு நாடுகளின் பிரச்சினை. இந்தியாவும் பாகிஸ்தானும் இரு தரப்புப் பேச்சுவார்த்தை மூலமாகவே தீர்வு காணவேண்டும் என்பதே இந்தியாவின் உறுதியான நிலைப்பாடு.
காஷ்மீர் பிரச்சினையில் மூன்றாவது நபரின் தலையீடு தேவையற்றது என்பதே இந்தியாவின் நிலைப்பாடு என கூறி டிரம்பின் கருத்துக்கு மறுப்பு தெரிவித்தார். இதற்கு டிரம்ப் என்ன பதில் அளிப்பார் என்பது எதிர்பார்ப்பை ஏற்படுத்தியிருந்தது. இந்நிலையில், வெள்ளை மாளிகையின் ஆலோசகரான கெல்லி ஆன்னே கான்வே நேற்று செய்தியாளர்களை சந்தித்தபோது, காஷ்மீர் விவகாரத்தில் டொனால்ட் ட்ரம்ப் தெரிவித்தது பற்றியும், அதை இந்திய அரசு தரப்பு மறுத்துள்ளது பற்றியும் கேள்வியெழுப்பப்பட்டது.
அதற்கு பதிலளித்த கெல்லி, பிரதமர் நரேந்திர மோடியுடனும், இந்திய அரசுடனும் நாம் நல்லுறவை பாதுகாத்து வருகிறோம். அதிபர் ட்ரம்பின் கருத்துகளுக்கு மேல் நான் எதுவும் கூற விரும்பவில்லை என்றார். மேலும், வெள்ளை மாளிகையின் செய்தித்தொடர்பாளர் மார்கன் ஆர்டகஸ் இவ்விவகாரம் தொடர்பாக கருத்து கூறவும் மறுத்துவிட்டார்.