இந்தியா
கர்நாடக அரசு கவிழ்ந்தது: நம்பிக்கை வாக்கெடுப்பில் குமாரசாமி அரசு தோல்வி!
கர்நாடகாவில் நிலவி வந்த குழப்பமான அரசியல் சூழல் தற்போது முடிவுக்கு வந்துள்ளது. பலநாட்களாக இழுத்தடித்து வந்த நம்பிக்கை வாக்கெடுப்பு தற்போது ஒருவழியாக நடந்து முடிந்துள்ளது. இதில் குமாரசாமி அரசுக்கு பெரும்பான்மை கிடைக்கவில்ல. இதனால் கர்நாடக அரசு கவிழ்ந்துள்ளது.
கர்நாடகாவில் 16 எம்எல்ஏக்கள் ராஜினாமா கடிதம் அளித்ததால் அங்கு கடந்த சில நாட்களாக பெரும் பதற்றமான அரசியல் சூழல் நிலவி வந்தது. அதிருப்தி எம்எல்ஏக்களை சமாதானம் செய்ய முயன்ற காங்கிரஸ், மஜத கட்சிகளின் முயற்சி பலனளிக்கவில்லை. இதனையடுத்து ஆளுநர் வஜுபாய் வாலாவும் கர்நாடக அரசுக்கு நம்பிக்கை வாக்கெடுப்பு நடத்த காலக்கெடு விதித்து நெருக்கடி கொடுத்து வந்தார்.
இந்நிலையில் கடந்த சில தினங்களாக கர்நாடக சட்டசபையில் நம்பிக்கை வாக்கெடுப்பை நடத்தாமல் இழுத்தடித்து வந்தது குமாரசாமி அரசு. ஆனால் ஒருவழியாக இன்று சட்டசபையில் நம்பிக்கை வாக்கெடுப்பு நடந்தது. இதில் மொத்தம் பதிவாகிய 204 வாக்குகளில் குமாரசாமி அரசுக்கு ஆதரவாக 99 வாக்குகளும், எதிராக 105 வாக்குகளும் பதிவாகின. இதனால் குமாரசாமி அரசு நம்பிக்கை வாக்கெடுப்பில் தோல்வியடைந்து கர்நாடக அரசு கவிழ்ந்தது.
இந்த நம்பிக்கை வாக்கெடுப்பில் 20 உறுப்பினர்கள் அவைக்கு வரவில்லை. குமாரசாமி அரசு நம்பிக்கை வாக்கெடுப்பில் 6 வாக்குகள் வித்தியாசத்தில் தோல்வியடைந்தது. இதனையடுத்து குமாரசாமி பதவி விலகும் பட்சத்தில் எடியூரப்பா ஆட்சியமைக்க ஆளுநரை சந்தித்து உரிமை கோருவார் என எதிர்பார்க்கப்படுகிறது.