தமிழ்நாடு
திமுக உடன் வைகோவுக்கு கருத்து வேறுபாடு: பரபரப்பு பேட்டி!
திமுக ஆதரவுடன் மாநிலங்களவைக்கு தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள மதிமுக பொதுச்செயலாளர் வைகோ என்ஐஏ சட்டத் திருத்த மசோதா விவகாரத்தில் திமுகவின் கருத்தோடு வேறுபடுவதாக பரபரப்பு பேட்டி ஒன்றை அளித்துள்ளார்.
என்ஐஏ எனப்படும் தேசியப் புலனாய்வு முகமை அமைப்புக்குக் கூடுதல் அதிகாரங்களை வழங்கும் சட்டத் திருத்த மசோதாவை மக்களவையில் கடந்த 15-ஆம் தேதி உள்துறை அமைச்சர் அமித் ஷா தாக்கல் செய்தார். காரசாரமான விவாதங்களுக்கு பின்னர் இந்த மசோதா 278 எம்பிக்களின் ஆதரவுடன் நிறைவேற்றப்பட்டது. இந்த என்ஐஏ சட்டத் திருத்த மசோதா ஓட்டெடுப்புக்கு வந்தபோது மசோதாவுக்கு ஆதரவாக திமுக வாக்களித்தது. இதனால் தமிழகத்தில் திமுகவுக்கு எதிராக கடும் விமர்சனங்கள் எழுந்தது. திமுக சிறுபான்மையினருக்கு எதிரான என்ஐஏவை ஆதரித்து வாக்களித்துவிட்டது என்ற குற்றச்சாட்டு பரவலாக எழுந்தது தமிழகத்தில்.
இதனையடுத்து இதுதொடர்பாக திமுக கொறடா ஆ.ராசா, விளக்கமளித்தார். இந்நிலையில் சென்னை தாயகத்தில் நேற்று முன்தினம் செய்தியாளர்களிடம் பேசிய மதிமுக பொதுச்செயலாளர் வைகோவிடம், என்ஐஏ சட்டத் திருத்த மசோதாவுக்கு திமுக ஆதரவு அளித்தது குறித்து கேள்வி எழுப்பப்பட்டது. அதற்கு பதிலளித்த வைகோ, என்ஐஏ சட்டத் திருத்த மசோதாவுக்கு திமுக ஆதரவளித்த முடிவிலிருந்து நான் வேறுபடுகிறேன். தனிப்பட்ட முறையில் எனக்கு உடன்பாடு இல்லை என்றார்.