இந்தியா
மோடி அரசு சூட்கேஸ் தூக்கும் அரசா? நிர்மலா சீதாராமன் விளக்கம்!
நடந்து முடிந்த மக்களவை தேர்தலில் பாஜக மிகப்பெரிய வெற்றிபெற்று அசுர பலத்துடன் இரண்டாவது முறையாக மோடி தலைமையில் ஆட்சி அமைத்துள்ளது. இதில் மத்திய நிதி அமைச்சராக நிரமலா சீதாராமன் பொறுப்பேற்றார். மத்திய நிதியமைச்சராக ஒரு பெண் முழுநேர அமைச்சராக இருப்பது இதுவே முதல்முறையாகும்.
இந்நிலையில் சில தினங்களுக்கு முன்னர் நிர்மலா சீதாராமன் தனது முதல் பட்ஜெட்டை தாக்கல் செய்தார். பொதுவாக இதற்கு முன்னர் அனைத்து நிதியமைச்சர்களும் பட்ஜெட்டை சூட்கேஸில் கொண்டுவந்து தாக்கல் செய்வார்கள். ஆனால் இந்தமுறை நிர்மலா சீதாராமன் பட்ஜெட்டை துணிப்பையில் கொண்டு வந்து தாக்கல் செய்தார். இது பல்வேறு கேள்விகளை எழுப்பியிருந்தது.
இந்நிலையில் சென்னையில் இன்று உலக நகரத்தார் வர்த்தக மாநாடு-2019 என்ற தலைப்பில் கருத்தரங்கம் நடைபெற்றது. இதில் சிறப்பு விருந்தினராக கலந்துகொண்ட மத்திய அமைச்சட் நிர்மலா சீதாராமன் பட்ஜெட் தாக்கல் செய்யும்போது சூட்கேசில் எடுத்துச்செல்லாதது குறித்து பேசினார். சூட்கேஸ் என்றால் எனக்கு வேறொன்று நினைவுக்கு வந்தது. சூட்கேஸ் கொடுத்து வாங்கும் முறை இந்த அரசிடம் இல்லை. மோடி அரசு சூட்கேஸ் தூக்கும் அரசும் இல்லை. அதற்காகவே நான் துணிப்பையில் எடுத்துச் சென்று பட்ஜெட் தாக்கல் செய்தேன் என்றார் அவர்.