தமிழ்நாடு
சூர்யாவை வாய மூடிக்கிட்டு இருக்க சொல்லுங்க: தொலைப்பேசியில் மிரட்டியதா அமைச்சர் தரப்பு?
![Surya - Bhoomitoday](https://www.bhoomitoday.com/wp-content/uploads/2019/07/Surya-1.jpg)
நடிகர் சூர்யா அகரம் அறக்கட்டளையின் 40-வது ஆண்டுவிழா நிகழ்ச்சியில் புதிய கல்விக்கொள்கைக்கு எதிராக பேசியது தமிழகம் முழுவதும் நன்கு சென்றடைந்துள்ளது. அரசியல் வட்டாரத்தில் இது பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது.
சூர்யாவின் பேச்சுக்கு பாஜகவின் எச்.ராஜா, தமிழிசை சௌந்தரராஜன் ஆகியோரும் அதிமுக அமைச்சர் கடம்பூர் ராஜுவும் எதிர்ப்பு தெரிவித்து சூர்யாவை விமர்சித்து பேட்டிகொடுத்தனர். ஆனால் மக்கள் மத்தியில் சூர்யாவுக்கு ஆதரவு பெருகியது. குறிப்பாக சமூக வலைதளங்களில் பலரும் சூர்யாவுக்கு ஆதரவாக பதிவிட்டனர்.
இந்நிலையில் தனக்கு பதிலடி கொடுத்த பாஜக மற்றும் அதிமுகவினருக்கு பதிலடி கொடுக்க சூர்யா அறிக்கை வெளியிடுவார் என எதிர்பார்க்கப்பட்டது. எதிர்பார்த்தபடியே சூர்யா பதில் அறிக்கை ஒன்றை தயாரித்ததாகவும், ஆனால் திடீரென அதனை கைவிட்டுவிட்டு அமைதியாக இருந்துவிடலாம் என பின்வாங்கியதாகவும் தகவல் ஒன்று கசிந்துள்ளது.
சூர்யா பதிலடி கொடுக்காமல் திடீரென அமைதியாக பின்வாங்கியது ஏன் என்ற தகவல் பிரபல தமிழ் புலனாய்வு இணையதளம் ஒன்றில் வெளியாகி உள்ளது. செய்தித்துறை அமைச்சர் கடம்பூர் ராஜூவின் அலுவலகத்தில் இருந்து சூர்யாவுக்கு போன் போட்டு அமைச்சரின் தரப்பில் சூர்யாவின் உதவியாளரிடம் பேசியதாக கூறப்படுகிறது. அதில், சூர்யா அரசாங்கத்தை எதிர்க்கிறதுன்னு முடிவு பண்ணிட்டாரா? அப்படின்னா சொல்லுங்க அரசாங்கத்தால என்ன பண்ண முடியுமோ அதை பண்ணிக்கிறோம்.
உங்க அகரம் ஃபவுண்டேஷன் ஏராளமான அரசுப்பள்ளிகள்ல பல நிகழ்ச்சிகள், உதவிகள் செஞ்சுக்கிட்டு வருது. அதை உடனே நிறுத்தச் சொல்லிடறீங்களா? கல்வித் துறை சார்பா இனி அகரம் ஃபவுண்டேஷனுக்கு எந்த ஒத்துழைப்பும் தேவையில்லைனு சூர்யாவை அறிவிக்கச் சொல்லுங்க. அப்புறமா அரசாங்கத்தை விமர்சிக்க சொல்லுங்க. அகரம் ஃபவுண்டேஷன் அரசுப் பள்ளிகள்ல தொடர்ந்து செயல்படணும்னா சூர்யாவை வாய மூடிக்கிட்டு இருக்க சொல்லுங்க என அமைச்சர் தரப்பில் பேசியதாக தகவல் வெளியாகி உள்ளது.
இதன் காரணமாகவே சூர்யா தான் தயாரித்து வைத்திருந்த பதில் அறிக்கையை வெளியிடாமல், தனது அகரன் ஃபவுண்டேஷன் தொடர்ந்து செயல்பட பின்வாங்கியதாக பேசப்படுகிறது.