தமிழ்நாடு
தமிழகத்தில் 9 மாவட்டங்களுக்கு கனமழை: வானிலை ஆய்வு மையம் தகவல்!
![Rain 2 - Bhoomitoday](https://www.bhoomitoday.com/wp-content/uploads/2019/07/Rain-2.jpg)
சென்னையில் நேற்று இரவு 8 மணிக்கு தொடங்கிய மழை நள்ளிரவு வரை நீடித்தது. இதனையடுத்து சென்னை உள்பட தமிழகத்தின் பல்வேறு இடங்களில் நேற்று மழை பெய்தது. இந்த மழையானது மேலும் 2 அல்லது 3 நாட்களுக்கு நீடிக்கும் எனவும் 9 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு உள்ளதாகவும் சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
வெப்பச் சலனம் காரணமாக நேற்று பல்வேறு இடங்களில் மழை பெய்தது. விழுப்புரம், ஈரோடு, திண்டிவனம், தேனி ஆகிய மாவட்டங்களிலும் கனமழை பெய்தது. இதனால் பொதுமக்கள் மகிழ்ச்சியடைந்தனர். அடையாறு, வேளச்சேரி, ராயபுரம், வண்ணாரப்பேட்டை, கொருக்குப்பேட்டை, தேனாம்பேட்டை ஆகிய பகுதிகளில் கனமழை கொட்டித் தீர்த்தது.
இந்நிலையில் அடுத்த இரண்டு நாட்களுக்கு இந்த மழை நீடிக்கும் என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. வேலூர், திருவண்ணாமலை, காஞ்சிபுரம், விழுப்புரம் ஆகிய பகுதிகளில் வெப்பசலனம் காரணமாகவும், மேற்கு தொடர்சி மலையை ஒட்டிய நீலகிரி, கோவையில் தென்மேற்கு பருவக் காற்றால் கனமழை பெய்யும் எனவும் வானிலை ஆய்வுமையம் தெரிவித்துள்ளது.
குறைந்த காற்றழுத்த தாழ்வு மையம் காரணமாக தமிழகம் மற்றும் புதுவையில் கனமழைக்கு வாய்ப்புள்ளது எனவும் அடுத்த 2 அல்லது 3 நாட்கள் 9 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையத்தின் இயக்குநர் பாலச்சந்திரன் தெரிவித்துள்ளார்.