தமிழ்நாடு
மதுப்பிரியர்கள் கஷ்டப்படுகிறார்கள், நடமாடும் டாஸ்மாக் வேண்டும்: தனியரசு எம்எல்ஏ கோரிக்கை!
தமிழகத்தில் மதுவிலக்கை அமல்படுத்த வேண்டும் என தமிழகத்தில் நீண்ட காலமாக போராட்டங்கள் நடந்து வருகின்றன. பல தலைவர்கள் மதுவிலக்குக்காக குரல் கொடுத்து வருகின்றனர். ஆனால் மதுப்பிரியர்கள் கஷ்டப்படுகிறார்கள், அவர்களுக்காக நடமாடும் டாஸ்மாக் வேண்டும் என சட்டமன்றத்தில் குரல் கொடுத்துள்ளார் காங்கேயம் தொகுதி எம்எல்ஏ தனியரசு.
தமிழக சட்டசபையில் மானியக் கோரிக்கை மீதான விவாதங்கள் நடைபெற்று வருகிறது. இதில் ஒவ்வொரு நாளும் பல்வேறு துறைகள் குறித்த கேள்விகளை எதிர்க்கட்சியினர் கேட்க, அதற்கு அமைச்சர்கள் உடனடியாக பதிலும் அளித்து வருகின்றனர். இந்நிலையில் இன்று வேளாண் துறை மீதான மானியக் கோரிக்கை நடைபெற்றது.
இதில் பேசிய காங்கேயம் சட்டமன்ற உறுப்பினர் தனியரசு, மாலை நேரங்களில் டாஸ்மாக் கடைகளில் மது பாட்டில் வாங்குவது மிகவும் கஷ்டமாக இருக்கிறது. அந்த காலத்தில் புதுப் படங்களுக்கு டிக்கெட் வாங்குவது எவ்வளவு கடினமோ அதுபோலவே ஒரு பாட்டிலை வாங்குவதற்கு நேரமாகிறது. மேலும் கிராமப்புறங்களில் டாஸ்மாக் கடை இல்லாமல் மதுப்பிரியர்கள் கஷ்டப்படுகின்றனர். எனவே தமிழகத்தில் நடமாடும் டாஸ்மாக் கடைகளை அமைக்க வேண்டும் என கோரிக்கை விடுத்தார். இதனால் சட்டசபையில் சிரிப்பலை ஏற்பட்டது.