தமிழ்நாடு
தண்டனையை ரத்து செய்ய வேண்டும்: தேசதுரோக வழக்கில் வைகோ மேல்முறையீடு!
![Vaiko 3 - Bhoomitoday](https://www.bhoomitoday.com/wp-content/uploads/2019/07/Vaiko-3-2.jpg)
மதிமுக பொதுச்செயலாளர் வைகோ தேசத்துரோக வழக்கில் தனக்கு விதிக்கப்பட்ட தண்டனையை ரத்து செய்யக்கோரி சென்னை உயர் நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்துள்ளார்.
கடந்த 2009-ஆம் ஆண்டு திமுக ஆட்சி காலத்தில் சென்னையில் நடந்த புத்தக வெளியீட்டு விழாவில் இந்திய இறையாண்மைக்கு எதிராக பேசியதாக வைகோ மீது தேச துரோக வழக்கு பதிவு செய்யப்பட்டது. எம்பி, எம்எல்ஏக்கள் மீதான வழக்குகளை விசாரிக்கும் சிறப்பு நீதிமன்றம் இந்த வழக்கை விசாரித்து சில தினங்களுக்கு முன்னர் தீர்ப்பு வழங்கியது.
அதில் வைகோ குற்றவாளி என சிறப்பு நீதிமன்றம் நீதிபதி சாந்தி தீர்ப்பு அளித்தார். அதில் வைகோவுக்கு 10 ஆயிரம் ரூபாய் அபராதமும், ஒரு ஆண்டு சிறை தண்டனையும் விதிக்கப்பட்டது. பின்னர் இந்த வழக்கில் மேல்முறையீடு செய்ய விரும்புவதாகவும், தண்டனையை நிறுத்தி வைக்குமாறும் வைகோ தரப்பில் கோரிக்கை வைக்கப்பட்டது. இதனை ஏற்றுக்கொண்ட நீதிபதி, வைகோ மேல்முறையீடு செய்வதற்கு வசதியாக சிறை தண்டனையை ஒரு மாதத்திற்கு நிறுத்தி வைப்பதாக உத்தரவிட்டார்.
இந்த நிலையில் சென்னை உயர் நீதிமன்றத்தில் இன்று வைகோ மேல்முறையீடு செய்தார். அதில், எனக்கு எதிராக நீதிமன்றம் வழங்கியுள்ள தீர்ப்பு சட்டவிரோதமானது. சட்டப்படி தீர்ப்பினை வழங்காமல் சிறப்பு நீதிமன்றம் தனக்கு தெரிந்த விஷயங்களை மட்டும் வைத்து வழங்கியுள்ளது. எனக்கு எதிரான குற்றச்சாட்டில் முழுமையான ஆதாரம், சாட்சியங்கள் இல்லாத நிலையில் தீர்ப்பு வழங்கப்பட்டுள்ளது. எனவே எனக்கு சிறப்பு நீதிமன்றம் அளித்த ஓராண்டு சிறை தண்டனையை ரத்து செய்து உத்தரவிட வேண்டும் என வலியுறுத்தியுள்ளார்.