கிரிக்கெட்
நியூசிலாந்து அணி வெற்றிபெற்றதற்கு இதுதான் காரணம்: விராட் கோலி பரபரப்பு பேட்டி!
இங்கிலாந்தில் மான்செஸ்டரில் நடைபெற்ற இந்தியா, நியூசிலாந்து அணிகளுக்கு இடையேயான முதல் அரையிறுதிப்போட்டியில் இந்திய அணி நியூசிலாந்திடம் 18 ரன்கள் வித்தியாசத்தில் போராடி தோல்வியை தழுவியது. இந்த தோல்வி குறித்து இந்திய அணியின் கேப்டன் கோலி கருத்து தெரிவித்துள்ளார்.
முதலில் டாஸ் வென்ற நியூசிலாந்து பேட்டிங்கை தேர்வு செய்தது. முதல் நாள் ஆட்டத்தின் போது மழை பெய்ததால் அடுத்த நாளான நேற்று அதே நிலையில் இருந்து போட்டி தொடங்கியது. அதில் நியூசிலாந்து அணி 50 ஓவர்கள் முடிவில் 6 விக்கெட் இழப்புக்கு 239 ரன்கள் எடுத்தது. இதனையடுத்து 240 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய அணி 49.3 ஓவர்களில் 221 ரன்களுக்கு அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து தோல்வியை தழுவியது.
இதனையடுத்து நியூசிலாந்து அணி 18 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்று இறுதிப்போட்டிக்கு முன்னேறியது. இந்நிலையில் இது குறித்து பேசிய இந்திய அணியின் கேப்டன் விராட் கோலி, நியூசிலாந்து அணி நிர்ணயித்த இலக்கை நாங்கள் எட்டுவோம் என்று நினைத்தோம். ஆனால் முதல் அரைமணி நேரம் ஆட்டத்தையே மாற்றி விட்டது. நியூசிலாந்து அணியின் பந்துவீச்சாளர்கள் சிறப்பாக பந்து வீசினார்கள், நியூசிலாந்து அணியின் வெற்றிக்கு முக்கிய காரணங்கள் அவர்கள் தான்.
தோனியும், ஜடேஜாவும் சிறப்பாக விளையாடினார்கள். போட்டி மீண்டும் எங்கள் கைக்கு வந்ததாகவே உணர்ந்தோம். சில தவறான ஷாட்களை நாங்கள் தேர்வு செய்துவிட்டோம். நாங்களும் தரமான பங்களிப்பை கொடுத்துள்ளோம். மேலும் டோனி தன்னுடைய ஓய்வு குறித்து எங்களிடம் எதுவும் கூறவில்லை என்றார்.