தமிழ்நாடு
வேலூர் தொகுதியில் தினகரனின் அமமுக போட்டியிடாததற்கு காரணம் இது தான்!
கடந்த மக்களவை தேர்தலின் போது வேலூர் தொகுதிக்கான தேர்தல் நிறுத்தப்பட்டது. வேலூரை தவிர மற்ற அனைத்து தொகுதிகளுக்கும் தேர்தல் நடத்தப்பட்டது. அந்த தேர்தலில் திமுக கூட்டணி 37 இடங்களிலும், அதிமுக ஒரு இடத்திலும் வெற்றிபெற்றது. பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட தினகரனின் அமமுக அனைத்து தொகுதிகளிலும் தோல்வியை தழுவியது.
இந்நிலையில் தற்போது வேலூர் மக்களவை தொகுதிக்கு தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டுவிட்டது. இதில் திமுக, அதிமுக கட்சிகள் கடந்தமுறை நிறுத்திய அதே வேட்பாளர்களை இந்தமுறையும் களமிறக்கியுள்ளது. ஆனால் டிடிவி தினகரனின் அமமுக இந்த தேர்தலில் போட்டியிடவில்லை.
இதுகுறித்த கேள்விக்கு செய்தியாளர்களிடம் பதிலளித்த தினகரன், அமமுகவை பதிவு செய்யும் பணியில் தீவிரமாக ஈடுபட்டிருக்கிறோம். இந்நிலையில் வேலூர் மக்களவைத் தேர்தலில் நாங்கள் போட்டியிட்டால் ஏற்கனவே போட்டியிட்ட பரிசுப்பெட்டி சின்னம் கேட்டாலும் கூட அதை தேர்தல் ஆணையம் வழங்குமா என்று தெரியவில்லை. எனவே மீண்டும் நாம் புதிய சின்னத்தில் சுயேச்சையாக நிற்க வேண்டுமா என்று வேலூர் மாவட்ட கழக நிர்வாகிகளும், தொண்டர்களும் என்னிடம் தொடர்ந்து தெரிவித்து வருகின்றனர்.
எனவே அமமுக பதிவு செய்யப்பட்ட பின் தேர்தலில் போட்டியிடலாம் என்று முடிவு செய்துள்ளோம் என்றார். மேலும் விக்கிரவாண்டி, நாங்குநேரி சட்டமன்ற தொகுதிகளுக்கான இடைத்தேர்தல் தேதி அறிவிக்கப்படும்போது அமமுக கட்சி பதிவு பெற்றிருக்கும். அப்போது நாங்கள் விரும்பும் ஒரு நிலையான சின்னத்தைப் பெற்று அந்த சின்னத்தில் போட்டியிடுவோம் என்றார் தினகரன்.