தமிழ்நாடு
ஒரு பிரியாணிக்கு ஆசைப்பட்டு 40 ஆயிரம் ரூபாயை இழந்த கல்லூரி மாணவி!
சென்னையில் கல்லூரி மாணவி ஒருவர் 76 ரூபாய் பிரியாணிக்கு 40 ஆயிரம் ரூபாயை இழந்த பரிதாப சம்பவம் நடந்துள்ளது.
சென்னை சௌகார்பேட்டையை சேர்ந்த பிரியா அகர்வால் என்ற மாணவி பிரியாணி சாப்பிடலாம் என நினைத்து தனது செல்போனில் உள்ள உபர் ஈட்ஸ் செயலி மூலம் பிரியாணி ஒன்றை ஆர்டர் செய்துள்ளார். அந்த பிரியாணிக்காக மாணவியின் வங்கி கணக்கில் இருந்து 76 ரூபாய் பிடித்தம் செய்யப்பட்டது.
ஆனால் பணம் பிடித்தம் செய்யப்பட்ட பின்னர் அந்த பிரியாணி ஆர்டர் ரத்து செய்யப்பட்டதாக மெஸ்ஸேஜ் ஒன்று வந்துள்ளது. ஆர்டர் மட்டும் ரத்து செய்யப்பட்டுள்ளது பிடித்தம் செய்யப்பட்ட பணம் வரவில்லையே என அந்த மாணவி கூகுளில் உபர் ஈட்ஸ் கஸ்டமர் கேர் எண்ணை தேடியுள்ளார். இதனையடுத்து கூகுளில் கிடைத்த உபர் ஈட்ஸ் கஸ்டமர் கேர் நம்பரை உண்மையான நம்பர் என நினைத்து போலி நம்பருக்கு கால் செய்துள்ளார்.
எதிர்முனையில் பேசிய நபர் மாணவி பிரியா அகர்வாலின் வங்கி விவரங்களை வாங்கிக்கொண்டு, பின்னர் 76 ரூபாய் சின்ன தொகை என்பதால் அதனை ஆன்லைன் மூலமாக அனுப்ப முடியாது, எனவே நீங்கள் 5000 ரூபாய் அனுப்புங்கள், நான் மொத்தமாக 5076 ரூபாயாக திருப்பி செலுத்தி விடுகிறேன் என கூறியுள்ளார்.
அந்த நபர் தன்னை ஏமாற்றுகிறார் என்பதை அறியாத அந்த மாணவி, கூகுல் பே மூலம் அந்த போலி நபருக்கு அனுப்பியுள்ளார். ஆனால் அந்த நபர் மாணவியின் வங்கி விபரங்களை ஏற்கனவே வாங்கி வைத்துக்கொண்டதால் நீங்கள் அனுப்பிய பணம் வந்து சேரவில்லை, இப்போது உங்களுக்கு ஒரு ஒடிபி எண் வரும் அதனை கூறினால் பணம் வங்கி கணக்கில் வந்து சேரும் என கூறியுள்ளார். இதனையும் நம்பி அந்த மாணவி ஒடிபி எண்ணை கூறியுள்ளார்.
இதனையடுத்து அந்த மாணவி தனது வங்கி கணக்கில் பணம் வரவில்லை என கூற, அந்த நபர் மீண்டும் ஒரு ஒடிபி எண் வரும் அதனை கூறுங்கள் என கூறி 8 முறை மாணவியின் வங்கி கணக்கில் இருந்து ஐந்தாயிரம், ஐந்தாயிரம் என மொத்தம் 40 ஆயிரம் ரூபாய் எடுத்துள்ளார். இதனையடுத்து அழைப்பையும் துண்டித்துள்ளார் அந்த மோசடி நபர். பின்னர் தான் ஏமாற்றப்பட்டிருப்பதை உணர்ந்த அந்த மாணவி காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். போலீசார் இது தொடர்பாக விசாரணை நடத்தி வருகின்றனர். மாணவி தொடர்பு கொண்ட அந்த எண்ணை வைத்து விசாரணை நடந்து வருகிறது.