தமிழ்நாடு
பாமகவுக்கு ராஜ்யசபா: அதிமுக அமைச்சரின் நம்பிக்கையான பதில்!
தேர்தலுக்கு முன்னர் பாமகவுடன் அதிமுக செய்துகொண்ட ஒப்பந்தத்தின் படி அவர்களுக்கு ஒரு ராஜ்யசபா சீட் வழங்குவது தான் மரபு எனவும் அதனை அதிமுக மீறாது எனவும் பாமகவுக்கு நம்பிக்கையளிக்கும் வார்த்தைகளை பேசியுள்ளார் அமைச்சர் ஜெயக்குமார்.
தமிழகத்திலிருந்து மாநிலங்களவைக்கு தேர்ந்தெடுக்கப்பட்ட அதிமுக மாநிலங்களவை உறுப்பினர்கள் ரத்தினவேல், மைத்ரேயன், அர்ஜுனன், லக்ஷ்மணன், இந்திய கம்யூனிஸ்ட் டி.ராஜா, திமுக உறுப்பினர் கனிமொழி ஆகியோரின் பதவிக் காலம் வரும் ஜூலை 24-ஆம் தேதியுடன் முடிகிறது. இந்நிலையில் சட்டமன்றத்தில் தற்போதுள்ள எம்எல்ஏக்கள் பலத்தின்படி அதிமுக, திமுக ஆகிய கட்சிகள் தலா 3 மாநிலங்களவை உறுப்பினர்களை பெறுவதற்கு வாய்ப்பு உள்ளது.
அதற்கான வேட்புமணு தாக்கல் நேற்று தொடங்கியதையடுத்து திமுக சார்பில் வேட்பாளர்களாக தொமுச பேரவை பொதுச் செயலாளர் சண்முகம், வழக்கறிஞர் பி.வில்சன் ஆகியோர் போட்டியிடுவார்கள் என கூறப்பட்டுள்ளது. ஆனால் அதிமுக வேட்பாளர்கள் பட்டியல் இன்னும் வெளியாகவில்லை. இந்நிலையில் நேற்று செய்தியாளர்களை சந்தித்த அமைச்சர் ஜெயக்குமாரிடம், பாமகவுக்கு மாநிலங்களவை உறுப்பினர் பதவி ஒப்பந்தத்தின் அடிப்படையில் வழங்கப்படுமா என கேள்வி எழுப்பினர்.
இதற்கு பதில் அளித்த அமைச்சர், இதுதொடர்பாக ஒருங்கிணைப்பாளரும், இணை ஒருங்கிணைப்பாளரும் கருத்து தெரிவித்துள்ளனர். ஒப்பந்தத்தில் இருப்பதை அமல்படுத்துவதுதான் மரபு. எனவே கட்சியும் ஒருங்கிணைப்பாளர்களும் அந்த வழியைத் தான் பின்பற்றுவர். அதிமுக எப்போதும் ஜென்டில் மேனாகவே இருக்கும். அமைச்சரின் இந்தப் பதில், பாமகவுக்கு ஒரு மாநிலங்களவை உறுப்பினர் பதவி வழங்கப்படும் என்பதை உறுதிப்படுத்தும் விதமாகவே அமைந்துள்ளது.
அவ்வாறு பாமகவுக்கு அதிமுக ஒரு மாநிலங்களவை உறுப்பினர் பதவி வழங்கும் பட்சத்தில் அக்கட்சியின் சார்பில் பாமக இளைஞரணித் தலைவர் அன்புமணி ராமதாஸ் போட்டியிடலாம் என கூறப்படுகிறது. அவர் தர்மபுரி மக்களவை தேர்தலில் போட்டியிட்டு தோல்வியடைந்தவர்.