தமிழ்நாடு
திமுகவில் நிர்வாகிகள் பஞ்சம்: தினகரன் அதிரடி!
சமீபத்தில் அமமுக பொதுச்செயலாளர் டிடிவி தினகரனுக்கும் அந்த கட்சியின் கொள்கை பரப்பு செயலாளராக இருந்த தங்க தமிழ்செல்வனுக்கும் இடையே ஏற்பட்ட மோதல் காரணமாக தங்க தமிழ்செல்வன் அமமுகவில் இருந்து விலகி திமுகவில் இணைந்தார்.
தங்க தமிழ்செல்வன் முதலில் அதிமுகவில் தான் இணைவார் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் யாருமே எதிர்பார்க்காதவண்ணம் அவர் அண்ணா அறிவாலயத்தில் திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் முன்னிலையில் தன்னை திமுகவில் இணைத்துக்கொண்டார். இது அரசியல் வட்டாரத்தில் பரபரப்பாக பேசப்பட்டது.
இந்நிலையில் மதுரையில் இன்று செய்தியாளர்களை சந்தித்த டிடிவி தினகரனிடம், அமமுகவிலிருந்து செல்பவர்கள் திமுகவில் இணைவதற்கான காரணம் என்ன என்பது குறித்த கேள்வி எழுப்பப்பட்டது. இதற்கு பதிலளித்த தினகரன், எங்களை ரெட்டபாடி கட்சி என்று விமர்சித்தவர்கள் இன்று அழைக்கிறார்கள். அவர்களிடம் நிர்வாகிகள் பஞ்சம் இருப்பதால் எங்களிடம் தயாரானவர்களை அழைத்துக் கொள்கின்றனர் என்று காட்டமாக விமர்சித்தார்.