தமிழ்நாடு
நீதிபதியிடம் கேள்வி கேட்டதால் மது ஒழிப்பு போராளி நந்தினியின் நிலை: திருமணத்தை வைத்துக்கொண்டு சிறையில்!
மதுஒழிப்பு போராளி வழக்கறிஞர் நந்தினிக்கு வரும் 5-ஆம் தேதி திருமணம் நடைபெற இருந்த நிலையில் அவரை வரும் 9-ஆம் தேதி வரை சிறையில் வைக்க நீதிபதி உத்தரவிட்டுள்ளார்.
கடந்த 2014-ஆம் ஆண்டு டாஸ்மாக்கிற்கு எதிராக போராட்டம் நடத்திய நந்தினி மற்றும் அவரது தந்தை மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டது. இந்த வழக்கின் விசாரணை நேற்று நடைபெற்றது. அப்போது நந்தினி, ஐபிசி 328-ன் படி, டாஸ்மாக் மூலம் போதைப்பொருள் விற்பது குற்றமில்லையா என நீதிபதியிடம் வாதாடினார்.
நந்தினியும், அவரது தந்தையும் நீதிமன்றத்தில் மேலும் பல கேள்விகளை எழுப்பியுள்ளனர். அப்போது நீதிபதி சாமுண்டீஸ்வரி பிரபா, வழக்கிற்கு தொடர்பில்லாத கேள்விகளைக் கேட்க வேண்டாம் என்று அறிவுறுத்தியுள்ளார். ஆனாலும் தொடர்ந்து இருவரும் மதுபானம் உணவுப் பொருளா? என்று கேள்வி எழுப்பினர். தொடர்ந்து, இருவரும் சப்தமிட்டதாக கூறப்படுகிறது. இதனால், இருவர் மீதும் நீதிமன்ற அவமதிப்பு வழக்குப் பதிவு செய்யப்பட்டு கைதுசெய்யப்பட்டு மதுரை மத்திய சிறையில் அடைக்கப்பட்டனர்.
ஜூலை 5-ஆம் தேதி நந்தினிக்கு திருமணம் நடக்கயிருந்த நிலையில் அவரை ஜூலை 9-ஆம் தேதி வரை சிறையிலடைக்க நீதிபதி சமுண்டீஸ்வரி பிரபா உத்தரவிட்டிருப்பது அவரது குடும்பத்தினரிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.