தமிழ்நாடு
தங்க தமிழ்செல்வனை பின்னால் இருந்து இயக்கும் பாஜகவின் அமித் ஷா?
அமமுக பொதுச்செயலாளர் டிடிவி தினகரனுக்கும் தங்க தமிழ்செல்வனுக்கும் இடையே உச்சக்கட்ட மோதல் நீடித்துவரும் நிலையில் அவரை பாஜகவின் அமித் ஷா பின்னால் இருந்து இயக்குவதாக நமது எம்ஜிஆர் நாளேடு கட்டுரை ஒன்றை வெளியிட்டது.
அதில், நான் யார்…நான் யார்… நீ யார் என்ற தலைப்பில் வெளியாகி உள்ள கட்டுரையில், தமிழகத்தில் பன்னீருக்கான செல்வாக்கை ஒடுக்க வேண்டும் என்று நினைக்கும் அமித் ஷா தற்போது தனது வேலையைக் காட்டத் தொடங்கிவிட்டார். பன்னீருக்கு எதிராக எடப்பாடியும் செயல்பட்டுவருவதால் பன்னீருக்கு நெருக்கடி ஏற்பட்டுள்ளது. ஆனால், அந்த நெருக்கடியை விட சொந்த மாவட்டத்தில் தங்க தமிழ்செல்வனால் தனக்கும், தனது குடும்பத்திற்கும் அரசியல் நெருக்கடி மிகவும் பெரிது என்று தனது உதவியாளர்களிடம் பன்னீர் புலம்பி வருவது தெரிந்ததே.
தனது மகனுக்கு அமைச்சர் பதவி வேண்டும் என்று மல்லுக்கட்டிய பன்னீரை வீழ்த்த அமித் ஷா திட்டமிட்டார். இதன் தொடர்ச்சியாக தங்க தமிழ்ச்செல்வனை அமமுகவிலிருந்து இழுத்து கொம்பு சீவி புதிய ஜல்லிக்கட்டை ஏற்படுத்தி எடப்பாடியின் அரசியலை வளர்க்க வேண்டும் என்று அமித் ஷா முடிவு செய்துள்ளதாக தெரிகிறது. பன்னீரை ஒடுக்க வேண்டும் என்று அமித் ஷாவும் எடப்பாடியும் குருமூர்த்தியும் முடிவு செய்துவிட்டார்கள்.
இதன் தொடர்ச்சியாக எடப்பாடியும் தங்க தமிழ்ச்செல்வனை பயன்படுத்தி பன்னீருக்கு அவரது சொந்த மாவட்டத்திலேயே ஆப்பு வைப்பதற்கான ஏற்பாடுகளை செய்துவருகிறார். இந்த வியூகங்களின் வெளிப்பாடுதான் தங்க தமிழ்ச்செல்வனின் திடீர் ஆவேசம் மற்றும் தரக்குறைவான பேச்சு ஆகும் என்று அக்கட்டுரையில் கூறப்பட்டுள்ளது.