தமிழ்நாடு
அந்த தகுதி ஓபிஎஸ், ஈபிஎஸ், தினகரன், சசிகலா என யாருக்கும் இல்லை!
தமிழக முன்னாள் முதல்வராக இருந்த மறைந்த ஜெயலலிதா அதிமுகவின் பொதுச்செயலாளராகவும் இருந்தார். அவரது மறைவிற்கு பின்னர் தமிழகத்தில் பல்வேறு அரசியல் குழப்பங்கள் நீடித்து வருகின்றனர். அதிமுக என்ற கட்சியை ராணுவ கட்டுக்கோப்புடன் வைத்திருந்தார். ஆனால் இன்று நிலைமை அப்படியே தலைகீழாக உள்ளது.
தமிழக அரசியலில் ஜெயலலிதா விட்டுச்சென்ற இடத்தை தற்போது வரை யாராலும் நிரப்ப முடியவில்லை. அதிமுகவிலேயே அந்த இடத்துக்கு யாராலும் வர முடியவில்லை. ஓபிஎஸ், எடப்பாடி பழனிசாமி, தினகரன், சசிகலா என பலர் ஜெயலலிதாவின் இடத்தை பிடிக்க முயன்றாலும் அது முடியாமல் தான் இன்று வரை உள்ளது. இந்நிலையில் பிரபல தமிழ் வார இதழின் இணையதளத்துக்கு பேட்டியளித்த அதிமுக முன்னாள் எம்பி கே.சி.பழனிசாமி அதிமுக தொண்டர்கள் விரும்பும் தலைமை யார் என்ற கேள்விக்கு பதில் அளித்துள்ளார்.
அதில், இன்றைக்கு அதிமுகவுக்கு ஓபிஎஸ், ஈபிஎஸ், தினகரன், சசிகலா என யாரும் தலைமை கிடையாது. யார் அந்த தலைமை என்றால், அந்த தலைமை பெயரை சொல்லி பல இடங்களில் வெற்றி பெற வேண்டும். எம்ஜிஆர் பெயரை சொல்லி தமிழகம் முழுவதும் ஓட்டு கேட்டோம். ஜெயலலிதா பெயரை சொல்லி அதிமுகவினர் வாக்கு சேகரித்தனர். அதுதான் தன்னிகரற்ற தலைமை.
கட்சிக்குள் எல்லா முக்கியஸ்தர்களையும் அனுசரித்து, எல்லோரையும் அரவணைத்து போகிற தலைமைதான் இன்றைய தேவை அதிமுகவுக்கு. மிகப்பெரிய ஆளுமையான தலைவர் அதிமுகவை கட்டிக் காப்பாற்றுவதற்கு இன்று இல்லை. அது யதார்த்தமான சூழ்நிலை. அந்த இடத்திற்கு வருபவர்கள், ஒவ்வொரு இடத்திலேயும் ஒவ்வொரு பிரச்சனை, போட்டி, பொறாமை, விருப்பு, வெறுப்புகள் இருக்கும். நடுநிலையோட எல்லோரையும் அரவணைத்து, அனுசரித்து போகக்கூடிய ஒரு நபர் வரணும். அந்த தகுதி ஓபிஎஸ், ஈபிஎஸ், தினகரன், சசிகலாவுக்கு இல்லை. காலமும் தொண்டர்களும்தான் அந்த தலைமையை உருவாக்கும் என்றார்.