கிரிக்கெட்
பிரபல கிரிக்கெட் வீரர் லாராவுக்கு திடீர் நெஞ்சுவலி: மருத்துவமனையில் அனுமதி!
மேற்கிந்திய தீவுகள் அணியின் முன்னாள் கேப்டனும் கிரிக்கெட் ஜாம்பவானுமான பிரையன் லாரா திடீர் நெஞ்சுவலி காரணமாக மும்பை மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
கிரிக்கெட்டில் பல்வேறு தனி நபர் சாதனைகள் புரிந்த மேற்கிந்திய தீவுகள் அணியை சேர்ந்த பிரையன் லாராவுக்கு உலகம் முழுவதும் ரசிகர் பட்டாளம் உண்டு. இவர் தற்போது கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெற்றுள்ளதால் கிரிக்கெட் வர்ணனையாளராக உள்ளார். இந்நிலையில் லாரா மகாராஷ்டிரா மாநிலத்தின் பரேல் நகரில் உள்ள குளோபல் மருத்துவமனையில் திடீர் உடல்நலக் குறைவு காரணமா அனுமதிக்கப்பட்டுள்ளார்.
லாராவுக்கு நேற்று மதியம் தான் தங்கியிருந்த ஹோட்டலில் நிகழ்ச்சியொன்றில் பங்கேற்றபோது நெஞ்சுவலி ஏற்பட மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்பட்டார். குளோபல் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள லாராவுக்கு முதற்கட்டமாக ஆஞ்சியோகிராபி சோதனைக்கு பரிந்துரைத்துள்ளார் அவரை பரிசோதித்த மருத்துவர் பிரவீன் குல்கர்னி.
இது கிரிக்கெட் வட்டாரத்திலும் அவரது ரசிகர்கள் வட்டாரத்திலும் பரபரப்பை ஏற்படுத்த லாரா செய்தி ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில் நான் நலமாக இருக்கிறேன். நலமாகி நாளை எனது விடுதி அறைக்கு திரும்புவேன் என கூறியுள்ளார்.