தமிழ்நாடு
ஜூலை 1-ஆம் தேதி சபாநாயகர் மீதான நம்பிக்கையில்லா தீர்மானம்: காத்திருக்கும் அதிரடிகள்!
தினகரன் ஆதரவு எம்எல்ஏக்களான பிரபு, இரத்தினசபாபதி, கலைச்செல்வன் ஆகியோர் மீது சபாநாயகர் தனபால் நடவடிக்கை எடுக்க நோட்டீஸ் அனுப்பியதை அடுத்து திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் சபாநாயகர் தனபால் மீது நம்பிக்கையில்லா தீர்மானம் கொண்டு வர கடிதம் கொடுத்தார்.
இது தமிழக அரசியலில் பரபரப்பை ஏற்படுத்தியது. மேலும் இந்த நம்பிக்கையில்லா தீர்மானம் எப்போது கொண்டுவரப்படும் இந்த தீர்மானம் வெற்றிபெறுமா போன்ற எதிர்பார்ப்புகள் நிலவியது. இந்நிலையில் சபாநாயகர் மீதான நம்பிக்கையில்லா தீர்மானம் ஜூலை 1-ஆம் தேதி கொண்டுவரப்படும் என பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது.
தமிழக சட்டமன்ற மானியக் கூட்டத் தொடர் வரும் ஜூன் 28-ஆம் தேதி கூடவுள்ளது. ஜூன் 28-ஆம் தேதி தொடங்க உள்ள இந்த கூட்டத் தொடரானது ஜூலை 30-ஆம் தேதிவரை 23 நாட்களுக்கு நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. இது தொடர்பாக செய்தியாளர்களை சந்தித்தார் சபாநாயகர் தனபால், அப்போது, ஜூன் 28-ஆம் தேதி தொடங்கும் சட்டமன்றக் கூட்டத்தில் மறைந்த உறுப்பினர்களுக்கு இரங்கல் தெரிவித்து தீர்மானம் நிறைவேற்றப்படும். 29, 30 ஆகிய தேதிகளில் சனி, ஞாயிறு விடுமுறை. சபாநாயகர் மீது திமுக கொண்டு வந்த நம்பிக்கையில்லா தீர்மானம் ஜூலை 1-ஆம் தேதிக்கான பட்டியலில் எடுத்துக்கொள்ளப்படும். அனைத்து நாட்களிலும் கேள்வி நேரம் எடுத்துக் கொள்ளப்படும் என்றார்.
எடப்பாடி பழனிசாமி தலைமையிலான அதிமுக ஆட்சி தற்போது நூலிழையில் பெரும்பான்மை பெற்று நீடித்து வருவதால் ஜூலை 1-ஆம் தேதி கொண்டுவரப்பட உள்ள சபாநாயகர் மீதான நம்பிக்கையில்லா தீர்மானம் ஒருவேளை வெற்றியடைந்துவிட்டால் அது அடுத்தடுத்த அரசியல் நகர்வுகளால் ஆட்சி கவிழ்வதற்கு கூட வழிவகுக்கும் என்கிறார்கள் அரசியல் வட்டாரத்தில்.