தமிழ்நாடு
பிரேமலதா செயல்பாடு சரியில்லை: தினகரனை நோக்கி படையெடுக்கும் தேமுதிக நிர்வாகி!
கிருஷ்ணகிரி மாவட்ட தேமுதிக செயலாளர் சந்திரன் தனது ஆதரவாளர்களுடன் தேமுதிகவில் இருந்து விலகி நேற்று முன்தினம் தினகரன் முன்னிலையில் அமமுகவில் இணைந்தார். இது தேமுதிக வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
கடந்த மக்களவை தேர்தலின் போது தொண்டர்களின் எதிர்ப்பையும் மீறி தேமுதிக பிரேமலதாவின் விருப்பத்தின் பேரில் அதிமுக, பாஜக கூட்டணியில் இடம்பெற்றது. ஆனால் போட்டியிட்ட அனைத்து தொகுதிகளிலும் தேமுதிக படுதோல்வியை சந்தித்தது. இதனையடுத்து தேர்தல் முடிவுகளுக்கு பின்னர் தேமுதிக நிர்வாகிகள் பிரேமலதாவை சந்தித்து அதிமுக கூட்டணி வேண்டாம் என கோரிக்கை வைத்தனர். ஆனால் சமீபத்தில் காஞ்சிபுரத்தில் செய்தியாளர்களை சந்தித்த பிரேமலதா, உள்ளாட்சித் தேர்தல் உள்பட இனிவரும் தேர்தல்களில் அதிமுக, பாஜக கட்சிகளுடனான கூட்டணி தொடரும் என்று தெரிவித்திருந்தார்.
இது தேமுதிக நிர்வாகிகளை மேலும் அதிருப்தியடைய வைத்துள்ளது. இதனையடுத்து கிருஷ்ணகிரி தேமுதிக மாவட்டச் செயலாளர் சந்திரன் தனது ஆதரவாளர்களோடு தினகரனைச் சந்தித்து அமமுகவில் இணைந்தார். அவருடன் தேமுதிகவைச் சேர்ந்த கிருஷ்ணகிரி மாவட்ட, ஒன்றிய, நகர நிர்வாகிகள் என பலரும் இணைந்தனர். அப்போது முன்னாள் அமைச்சரும் அமமுக முக்கிய தலைவருமான பழனியப்பனும் உடனிருந்தார்.