இந்தியா
Z+ பாதுகாப்பில் உள்ள சந்திரபாபு நாயுடுவுக்கு விமான நிலையத்தில் நேர்ந்த சம்பவம்!
ஆந்திரா முன்னாள் முதல்வர் சந்திரபாபு நாயுடு Z+ பாதுகாப்பின் கீழ் உள்ளார். ஆனால் அவரை மற்றப் பயணிகளைப்போல விமான நிலையத்தில் நடத்தியது ஆந்திர அரசியலில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. அவரது கட்சி தொண்டர்களிடையே இது ஆத்திரத்தை ஏற்படுத்தியுள்ளது.
நடந்து முடிந்த தேர்தலில் சந்திரபாபுவின் தெலுங்கு தேசம் கட்சி படுதோல்வியை சந்தித்தது. இதனால் முதல்வர் பதவியை இழந்த சந்திரபாபு நாயுடு தேர்தல் தோல்வி குறித்து விவாதிக்க ஹைதராபாத்தில் இருந்து விஜயவாடாவில் நடந்த கட்சி கூட்டத்தில் பங்கேற்க சென்றார். இந்த கூட்டத்திற்கு பின்னர் அங்கிருந்து மீண்டும் ஹைதராபாத் செல்வதற்காக விமான நிலையம் வந்த சந்திரபாபு நாயுடுவின் வாகனம் விமான நிலையத்திற்குள் அனுமதிக்கப்படவில்லை.
Z+ பாதுகாப்பில் உள்ள சந்திரபாபு நாயுடுவை விமானத்தில் ஏற மற்ற பயணிகளுடன் விமான நிலைய பேருந்தில் செல்லும்படி அறிவுறுத்தப்பட்டது. விமான நிலையத்தில் சந்திரபாபு நாயுடுவுக்கு நடந்த சம்பவம் தொண்டர்களிடையே பலத்த எதிர்ப்பை ஏற்படுத்தியுள்ளது. இது அரசியல் பழிவாங்கும் நடவடிக்கை எனவும், விமான நிலைய அதிகாரிகள் மன்னிப்பு கோர வேண்டும் எனவும் சந்திரபாபுவின் ஆதரவாளர்கள் வலியுறுத்தி வருகின்றனர்.