இந்தியா
ஜெகன் மோகன் ரெட்டியின் அடுத்த அதிரடி: அரசு பள்ளியில் சேர்த்தால் பெற்றோருக்கு ரூ.15,000 ஊக்கத்தொகை!
சமீபத்தில் நடந்து முடிந்த மக்களவை தேர்தலிலும், ஆந்திர மாநில சட்டசபை தேர்தலிலும் ஜெகன் மோகன் ரெட்டியின் ஒய்.எஸ்.ஆர் காங்கிராஸ் கட்சி மாபெரும் வெற்றியை பெற்றது. சட்டசபை தேர்தல் வெற்றியை தொடர்ந்து ஆந்திர மாநில புதிய முதல்வராக ஜெகன் மோகன் ரெட்டி பதவியேற்றார்.
ஜெகன் மோகன் ரெட்டி ஆந்திரா முதல்வராக பதவியேற்றதில் இருந்து மாநிலத்தில் பல்வேறு அதிரடிகளை செய்து வருகிறார். அதன்படி தற்போது ராஜண்ணா படி பாட்டா என்ற கல்வித்திட்டம் ஒன்றை அறிவித்துள்ளார் ஆந்திர முதல்வர். ஆந்திர மாநிலம் கல்வியில் 100 சதவீதம் அடைய வேண்டும் என்ற நோக்கத்தில் இந்த திட்டம் கொண்டு வரப்பட்டுள்ளது.
இந்த திட்டத்தின்படி இன்னும் 2 ஆண்டுகளில் அரசு பள்ளிகளின் செயல்பாடு முற்றிலும் மாற்றி அமைக்கப்படும். மேலும், பள்ளிகளுக்கு செல்லாத பிள்ளைகளை பெற்றோர்கள் பள்ளிக்கு அனுப்பி வைக்க வேண்டும். பெற்றோர்கள் குழந்தைகளை அரசு பள்ளியில் சேர்த்தால், அந்த பெற்றோருக்கு ஆண்டுதோறும் ரூ.15,000 ஊக்கத்தொகை வழங்கப்படும். இந்த திட்டம் வருகிற குடியரசு தினத்தில் அமல்படுத்தப்படும் என ஜெகன் மோகன் ரெட்டி தெரிவித்துள்ளார்.