கிரிக்கெட்
இந்திய அணிக்கு பின்னடைவு: உலகக்கோப்பை தொடரிலிருந்து தவான் நீக்கம்!
12-வது உலகக் கோப்பை கிரிக்கெட் தொடர் இங்கிலாந்தில் நடைபெற்று வருகிறது. இதில் பங்கேற்று சிறப்பாக விளையாடி வருகிறது விராட் கோலி தலைமையிலான இந்திய அணி. இந்திய அணியில் தொடக்க ஆட்டக்காரராக களமிறக்கி சிறப்பான ஃபார்மில் உள்ளார் ஷிகார் தவான். இந்நிலையில் அவர் தற்போது உலகக்கோப்பை தொடரிலிருந்து நீக்கப்பட்டுள்ளது இந்திய அணிக்கு பெரும் பின்னடைவாக அமைந்துள்ளது.
கடந்த ஞாயிற்றுக்கிழமை ஆஸ்திரேலிய அணிக்கு எதிராக களமிறங்கிய இந்திய அணி 36 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றிபெற்றது. இந்த போட்டியில் சதம் அடித்த ஷிகர் தவான் ஆட்ட நாயகன் விருதை பெற்றார். ஆனால் அவர் பேட்டிங் செய்தபோது பந்து தாக்கியதில் கையில் காயம் ஏற்பட்டது. இதனால் அவருக்கு பதிலாக ஜடேஜா ஃபீல்டிங் செய்தார்.
இந்நிலையில் ஷிகர் தவானை பரிசோதித்த மருத்துவர்கள் காயம் காரணமாக அவரை 3 வாரங்கள் ஓய்வெடுக்க அறிவுறுத்தியுள்ளனர். இதனால் உலகக்கோப்பை தொடரில் இந்திய அணியில் இருந்து தவான் நீக்கப்பட்டுள்ளார். அவருக்கு பதிலாக மீதமுள்ள ஆட்டங்களில் ரிஷப் பந்த், ஸ்ரேயாஸ் ஐயர் இருவரில் ஒருவர் சேர்க்கப்படலாம் என தகவல் வெளியாகியுள்ளது.
மேலும் ரோஹித் ஷர்மாவுடன் தொடக்க ஆட்டக்காரராக ராகுல் களமிறக்கப்படலாம் என கூறப்படுகிறது. சிறப்பான ஃபார்மில் இருந்த ஷிகர் தவான் தொடரில் இருந்து விலகியுள்ளது இந்திய அணிக்கு பெரும் பின்னடைவாக பார்க்கப்படுகிறது.