தமிழ்நாடு
மீண்டும் ஒரு மரண அடியை அதிமுக அரசுக்கு புகட்ட வேண்டும்: மு.க.ஸ்டாலின் ஆவேசம்!
நடந்து முடிந்த மக்களவை தேர்தலில் நாடு முழுவதும் பாஜக அலை வீசினாலும் தமிழகத்தில் மட்டும் திமுக அலையே வீசியது. இதன் காரணமாக தமிழகத்தில் தேர்தல் நடந்த 38 தொகுதிகளில் 37 தொகுதிகளில் திமுக கூட்டணியே வெற்றிபெற்றது.
இதனையடுத்து திமுக கூட்டணி வேட்பாளர்களை வெற்றிபெறவைத்த மக்களுக்கு நன்றி தெரிவிக்கும் கூட்டம் திருச்சியில் நடைபெற்றது. இதில் திமுக முக்கிய தலைவர்கள், திருச்சி மத்திய மண்டலத்தில் வெற்றிபெற்ற எம்பிக்கள் மற்றும் சட்டசபை இடைத்தேர்தலில் வெற்றிபெற்றவர்கள் கலந்துகொண்டனர். திமுக தலைவர் மு.க.ஸ்டாலினும் இந்த கூட்டத்தில் கலந்துகொண்டார்.
அப்போது பேசிய மு.க.ஸ்டாலின், தேனியில் அதிமுக கோடி, கோடியாக பணத்தை கொட்டி வெற்றி பெற்றிருக்கிறது. தற்போது நாடாளுமன்ற தேர்தலில் பெற்ற வெற்றியை போன்று வருகின்ற சட்டமன்ற தேர்தலிலும் வெற்றிபெற வேண்டும் என சூளுரை ஏற்க வேண்டும். ஐந்து முறை ஆட்சி அமைத்த கலைஞரின், மக்கள் நலத்திட்டங்களை செயல்படுத்த, கலைஞரின் ஆட்சி மீண்டும் மலர வேண்டும் என்றார்.
மேலும் தொடர்ந்து பேசிய மு.க.ஸ்டாலின், பேரிழப்புக்கு எதிரான பேரியக்கத்தின் சார்பில் நடத்துகிற மனிதச்சங்கிலி போராட்டத்துக்கு திமுகவின் ஆதரவை தெரிவித்தார். கடந்த ஆண்டு இரண்டு பேர், இந்த முறை மூன்று பேர் என பலி கொடுத்திருக்கிறோம். இந்த தற்கொலைக்கு காரணமே மத்திய, மாநில அரசுகள்தான், சட்டமன்றத் தேர்தலில் மீண்டும் ஒரு மரண அடியை அதிமுக அரசுக்கு புகட்ட வேண்டும் என ஆவேசமாக கூறினார் ஸ்டாலின்.