தமிழ்நாடு
நன்னடத்தை அடிப்படையில் சசிகலாவை முன்னரே விடுவிக்க பரிந்துரை?
சொத்துக்குவிப்பு வழக்கில் தண்டனை பெற்று பெங்களூரு பரப்பன அக்ரஹார சிறையில் உள்ள சசிகலாவை நன்னடத்தை அடிப்படையில் தண்டனை காலத்துக்கு முன்னரே விடுதலை செய்ய சிறைத்துறை நிர்வாகம் மாநில அரசுக்கு பரிந்துரைத்துள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளது.
சொத்துக்குவிப்பு வழக்கின் தீர்ப்பின்படி கடந்த 2017-ஆம் ஆண்டு பிப்ரவரியில் சசிகலா, இளவரசி மற்றும் சுதாகரன் ஆகியோர் பரப்பன அக்ரஹார சிறையில் அடைக்கப்பட்டனர். இந்நிலையில் நான்கு வருட தண்டனையில் சிறைக்கு சென்ற சசிகலாவுக்கு தற்போது இரண்டரை வருடங்கள் நெருங்கிவிட்டது.
சசிகலா ஏற்கனவே வழக்கின் விசாரணை காலத்தில் சிறையில் இருந்தது, சிறப்பு நீதிமன்றம் வழங்கிய தீர்ப்பின் போது சிறையில் இருந்தது மற்றும் சசிகலாவை நன்னடத்தை விதிகளின் கீழ் விடுவிப்பது குறித்து கர்நாடக சிறைத்துறை அதிகாரிகள் அம்மாநில அரசுக்கு பரிந்துரை கடிதம் எழுதியிருப்பதாக தகவல்கள் வெளியாகி உள்ளது.
சிறைத்துறை நிர்வாகம் எழுதிய கடிதத்தை கர்நாடக அரசு ஏற்றுக்கொண்டால் சசிகலா வரும் டிசம்பர் மாதமே வெளிவர வாய்ப்பு உள்ளதாக கூறப்படுகிறது. சசிகலா வெளியே வந்தால் அவர் மீண்டும் அதிமுகவை கைப்பற்ற வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது. அதிமுகவில் ஒற்றை தலைமை என்ற கலக குரல் எழுந்துள்ளதை அடுத்து அந்த ஒற்றைத்தலைமை சசிகலாவாக இருக்கவும் வாய்ப்புள்ளது.