உலகம்
மோடி அமைச்சரவையில் உள்நோக்கத்துடன் தமிழகம் புறக்கணிக்கப்பட்டிருக்கிறது: காங்கிரஸ் குற்றச்சாட்டு!
நடந்து முடிந்த மக்களவை தேர்தலில் பாஜக தனிப்பெரும்பான்மையுடன் வெற்றிபெற்றதையடுத்து பிரதமராக மோடி நேற்று இரண்டாவது முறையாக பதவியேற்றார். அவருடன் சேர்ந்து மேலும் 57 பேர் மத்திய அமைச்சர்களாக பதவியேற்றனர். இவர்களுக்கு குடியரசுத்தலைவர் ராம்நாத் கோவிந்த் பதவிப்பிரமாணம் செய்து வைத்தார்.
25 கேபினட் அமைச்சர்கள், 24 இணை அமைச்சர்கள், 9 தனிப்பொறுப்புடன் கூடிய சிறப்பு அமைச்சர்கள் என மொத்தம் 58 பேர் நேற்று பதவியேற்றனர். ஆனால் இதில் தமிழகத்தில் கூட்டணி கட்சியான அதிமுகவை சேர்ந்த யாரும் அமைச்சராக பதவியேற்கவில்லை. இதனால் தமிழகத்தின் பிரதிநிதித்துவம் இல்லாமல் போனது. இந்நிலையில் ஏதோ ஒரு உள்நோக்கத்துடன் தான் தமிழகம் புறக்கணிக்கப்பட்டுள்ளதாக தமிழக காங்கிரஸ் தலைவர் கே.எஸ்.அழகிரி குற்றம்சட்டியுள்ளார்.
இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், மத்திய அமைச்சரவையில் பாஜகவோடு கூட்டணி சேர்ந்து போட்டியிட்ட அதிமுக சார்பாக எவரும் அமைச்சரவையில் சேர்க்கப்படவில்லை. மக்களவையில் ஒரு தொகுதியில் மட்டும் வெற்றி பெற்றிருந்தாலும் ஏற்கெனவே மாநிலங்களவையில் 13 உறுப்பினர்களை அதிமுக பெற்றிருக்கிறது. இவர்களது ஆதரவு என்பது மத்திய பாஜக அரசுக்கு மிகமிக அவசியமாகும். ஆனாலும், அதிமுகவிலிருந்து எவரையும் மத்திய அமைச்சரவையில் சேர்க்காமல் புறக்கணித்திருப்பதற்கான காரணங்கள் என்ன என்பது தெரியவில்லை.
இதன்மூலம் அதிமுகவை மட்டுமல்ல, தமிழகத்தையும் புறக்கணித்திருப்பதாகவே கருத வேண்டியிருக்கிறது. மோடிக்கு எதிராக தமிழகத்தில் எதிர்ப்பு அலை வீசிய காரணத்தால் இத்தகைய புறக்கணிப்பு நடைபெற்றிருப்பதாகவே எண்ண தோன்றுகிறது. அதிமுகவை புறக்கணித்திருந்தாலும், பாஜகவை சேர்ந்த பொன்.ராதாகிருஷ்ணன், இல.கணேசன், தமிழிசை சவுந்தரராஜன் ஆகியோரில் ஒருவரை மாநிலங்களவை உறுப்பினராக்கி மத்திய அமைச்சரவையில் வாய்ப்பு வழங்கியிருக்கலாம்.
கேரளாவிற்கு பிரதிநிதித்துவம் வழங்க வேண்டும் என்பதற்காக வி.முரளிதரனுக்கு மகாராஷ்டிர மாநிலத்திலிருந்து மாநிலங்களவை உறுப்பினராக தேர்வு செய்யப்பட்டு அமைச்சராக வாய்ப்பு வழங்கப்பட்டிருக்கிறது. அதைப்போல தமிழகத்திற்கும் வாய்ப்பு வழங்கியிருக்கலாம்.
மத்திய அமைச்சர்களாக பொறுப்பேற்றிருக்கிற நிர்மலா சீதாராமன், ஜெய்சங்கர் ஆகியோரை தமிழர்கள் என்று கூறினாலும், தமிழக மக்களோடு தொடர்பில்லாத இவர்களை தமிழகத்தின் பிரதிநிதிகளாக கருத முடியாது. எனவே, ஏதோ ஒரு உள்நோக்கத்துடன் தமிழகம் புறக்கணிக்கப்பட்டிருக்கிறது. இதற்கு முழு பொறுப்பு பிரதமர் நரேந்திர மோடி தான் என தெரிவித்துள்ளார்.