கிரிக்கெட்
உலகக் கோப்பை கிரிக்கெட்: பாகிஸ்தானை பந்தாடிய மேற்கிந்தியத் தீவுகள் அணி!
உலகக் கோப்பை கிரிக்கெட் தொடர் இங்கிலாந்தில் நேற்று முன்தினம் தொடங்கியது. இந்த தொடரின் இரண்டாவது ஆட்டம் நேற்று பாகிஸ்தான், மேற்கிந்தியத் தீவுகள் அணிகளுக்கு இடையே நடைபெற்றது. இதில் மேற்கிந்தியத் தீவுகள் அணி 7 விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றுள்ளது.
நேற்றைய போட்டியில் டாஸ் வென்ற மேற்கிந்தியத் தீவுகள் அணியின் கேப்டன் ஜேசன் ஹோல்டர் பந்துவீச்சைத் தேர்வு செய்தார். தொடக்கம் முதலே மேற்கிந்திய தீவுகள் அணியின் பந்துவீச்சாளர்கள் ஆக்ரோஷமாக பந்து வீசினர். இதனால் 21.4 ஓவர்களில் பாகிஸ்தான் அணி அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 105 ரன்களில் சுருண்டது.
மேற்கிந்தியத் தீவுகள் அணித் தரப்பில் ஒசேன் தாமஸ் 4 விக்கெட்டுகளும், கேப்டன் ஜேசன் ஹோல்டர் 3 விக்கெட்டுகளும் வீழ்த்தினர். பாகிஸ்தான் தரப்பில் ஃபகர் சமான், பாபர் அசாம் ஆகியோர் தலா 22 ரன்கள் அடித்தனர். மற்ற அனைவரும் சொற்ப ரன்னிலே நடையை கட்டினர்.
இதனையடுத்து 106 ரன்கள் அடித்தால் வெற்றி என்ற எளிய இலக்குடன் களமிறங்கியது மேற்கிந்தியத் தீவுகள் அணி. தொடக்க ஆட்டக்காரராக களமிறங்கிய கிறிஸ் கெயில் அதிரடி காட்ட அந்த அணி 13.4 ஓவர்களில் 3 விக்கெட்டுகளை மட்டும் இழந்து 108 ரன்கள் எடுத்து வெற்றிபெற்றது. அதிகபட்சமாக கிறிஸ் கெயில் 50 ரன்னும், பூரன் 34 ரன்னும் எடுத்தனர். பாகிஸ்தான் தரப்பில் முகமது ஆமிர் 3 விக்கெட்டுகளை வீழ்த்தினார்.
இதனையடுத்து 4 விக்கெட்டுகளை வீழ்த்தி பாகிஸ்தான் அணியை நிலைகுலைய செய்த மேற்கிந்திய தீவுகள் அணியின் பந்துவீச்சாளர் ஒசேன் தாமஸ் ஆட்டநாயகன் விருதை பெற்றார்.
இன்றைய போட்டி: ஆஸ்திரேலியா Vs ஆப்கானிஸ்தான்
இடம்: பிரிஸ்டோல் கவுண்டி
நேரம்: மாலை 6 மணி.