தமிழ்நாடு
மீண்டும் காலை சுற்றும் பாம்பாக 2ஜி வழக்கு: ஆ.ராசா, கனிமொழிக்கு நீதிமன்றம் நோட்டீஸ்!
மீண்டும் எம்பியாக தேர்வு செய்யப்பட்டுள்ள திமுக உறுப்பினர்களான கனிமொழி மற்றும் ஆ.ராசாவுக்கு உயர் நீதிமன்றம் 2ஜி வழக்கில் நோட்டீஸ் அனுப்ப உத்தரவிட்டுள்ளது.
கடந்த 2014-ஆம் ஆண்டு காங்கிரஸ் ஆட்சியை வீட்டுக்கு அனுப்ப முக்கிய காரணங்களில் ஒன்றாக இருந்தது 2ஜி வழக்கு. ஆனால் கடந்த 2017-ஆம் ஆண்டு டிசம்பர் 21-ஆம் தேதி இந்த வழக்கில் குற்றம் சாட்டப்பட்ட அனைவரையும் விடுதலை செய்து குற்றமற்றவர் என தீர்ப்பளித்தார் சிபிஐ சிறப்பு நீதிமன்ற நீதிபதி ஒ.பி.ஷைனி.
இதனையடுத்து இந்த தீர்ப்புக்கு எதிராக அமலாக்கத் துறை சார்பிலும், சிபிஐ சார்பில் டெல்லி உயர் நீதிமன்றத்தில் மேல் முறையீடு செய்யப்பட்டது. கடந்த ஒரு வருடமாக நடந்துவரும் இந்த வழக்கின் விசாரணை இன்று நீதிபதி ஏ.கே.சாவ்லா முன்னிலையில் விசாரணைக்கு வந்தது. அவர் சிபிஐ தரப்பு இந்த வழக்கை விரைந்து முடிக்க வேண்டும் என அவசரம் காட்டுவதால் ஜூலை 30-ஆம் தேதிக்கு ஒத்திவைத்தார்.
மேலும் இந்த வழக்கில் சம்பந்தப்பட்ட முன்னாள் மத்திய அமைச்சரும் தற்போதைய நீலகிரி தொகுதி திமுக எம்பியுமான ஆ.ராசாவுக்கும், தூத்துக்குடி தொகுதி திமுக எம்பியுமான கனிமொழிக்கும் நோட்டீஸ் அனுப்ப நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.